கொரோனா பரவலால் அஜித்தின் வலிமை படக்குழு புது முடிவு
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது. அந்த காட்சிகளை ஸ்பெயினில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். வலிமை படத்தின் தகவல்கள் கேட்டு ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இதையடுத்து அஜித்குமாரின் வலிமை முதல் தோற்ற புகைப்படம் மே 1-ந்தேதி அவரது பிறந்த நாளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதல் தோற்ற போஸ்டரை எதிர்பார்த்து ஆர்வமாக இருந்தனர். ஆனால் கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் வலிமை படத்தின் முதல்
தோற்ற போஸ்டர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘'மே. 1-ந்தேதி வலிமை படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுவதாக அறிவித்தபோது கொரோனாவின் 2-வது அலை சுனாமி போல தாக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து உற்றார் உறவினர் உயிர் இழந்து நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து உள்ளனர். இதையடுத்து படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் ஒருங்கிணைந்து எடுத்த முடிவின்படி வலிமை படத்தின் முதல் தோற்றம் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது'' என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story