கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகள் பாதிப்பு
கொரோனா 2-வது அலை சினிமா தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன.
கொரோனா 2-வது அலை சினிமா தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறுபட்ஜெட் படங்கள் முடங்கி உள்ளன. சினிமா படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு அதிகமான துணை நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் படப்பிடிப்பை நிறுத்தி உள்ளனர்.
அஜித்குமாரின் வலிமை படத்துக்கு சில சண்டை காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு இருந்தனர். கொரோனாவால் அந்த படப்பிடிப்பையும் தள்ளி வைத்துள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சியொன்றில் 150-க்கும் மேற்பட்டோர் நடிக்க வேண்டி உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் அதை படமாக்க முடியாமல் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர்.
இதுபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படப்பிடிப்பு வேலைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதுபோல் பல படப்பிடிப்புகள் முடங்கி உள்ளன.
Related Tags :
Next Story