'ஆட்டோகிராப்' பட புகழ் பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் மரணம்


ஆட்டோகிராப் பட புகழ் பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் மரணம்
x
தினத்தந்தி 7 May 2021 1:00 AM GMT (Updated: 7 May 2021 1:00 AM GMT)

'ஆட்டோகிராப்' பட புகழ் பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் மரணம்.

சேரன் நடித்து இயக்கி 2004-ல் திரைக்கு வந்த ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடல் காட்சியில் நடித்து பாடல் இறுதியில் மனிதா உன் மனதை கீறி விதை போடு உரமாகும் போன்ற சில வரிகளை உணர்ச்சிகரமாக பாடி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் கோமகன்.

இந்த பாடலை எழுதிய கவிஞர் பா.விஜய்க்கும், பாடிய சித்ராவுக்கும் தேசிய விருது கிடைத்தது. மாற்று திறனாளியான கோமகன் கண்ணுக்குள்ளே, சுறா உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் முதலாய் என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இசைக்குழுவை வைத்து மேடை இசை கச்சேரிகளில் கோமகன் பாடி வந்தார்.

2019-ல் கலைமாமணி விருது பெற்றார். இந்த நிலையில் கோமகனுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக அயனாவரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. மரணம் அடைந்த கோமகனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.


Next Story