படப்பிடிப்பு முடிகிறது சென்னை திரும்பும் ரஜினி


படப்பிடிப்பு முடிகிறது சென்னை திரும்பும் ரஜினி
x
தினத்தந்தி 10 May 2021 9:22 PM GMT (Updated: 10 May 2021 9:22 PM GMT)

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

 கடந்த டிசம்பர் மாதம் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

ரஜினிகாந்த் தனி விமானத்தில் கடந்த மாதம் 7-ந்தேதி ஐதராபாத் சென்று தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். படப்பிடிப்பில் கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்புகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன.

படக்குழுவினர் வெளியே செல்லவும் வெளிநபர்கள் படக்குழுவினரை சந்திக்கவும் தடை விதித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு விசேஷமாக கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்பு அளித்துள்ளனர். நயன்தாராவும் சமீபத்தில் படப்பிடிப்பில் இணைந்தார்.

ரஜினிகாந்தும் நயன்தாராவும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இரவு நேர காட்சிகளிலும் ரஜினிகாந்த் பங்கேற்று நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

ரஜினிகாந்த் தன்னுடைய காட்சிகளை முடித்துவிட்டு ஓரிரு நாளில் சென்னை திரும்புகிறார். சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிவா இயக்குகிறார். படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

Next Story