1,500 படங்களில் நடித்து சாதனை புரிந்த மனோரமா


1,500 படங்களில் நடித்து சாதனை புரிந்த மனோரமா
x
தினத்தந்தி 30 May 2021 12:06 AM GMT (Updated: 30 May 2021 12:06 AM GMT)

தென்னிந்திய மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்தவர், மனோரமா. திரையுலகினரால் ‘‘ஆச்சி’’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார்.

தென்னிந்திய மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்தவர், மனோரமா. திரையுலகினரால் ‘‘ஆச்சி’’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார். இந்திய திரையுலகில் சாதனை புரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். மனோரமா, மன்னார்குடியில் பிறந்தார். அவருடைய சொந்த பெயர், கோபி சாந்தா. அவர் சிறுமியாக இருந்தபோது குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூருக்கு குடிபெயர்ந்தது. குடும்ப சூழல் காரணமாக 12 வயதில் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது அவருடைய பெயர், மனோரமா என்று மாற்றப்பட்டது.

எந்தவித குடும்ப பின்னணியும் இல்லாத மனோரமாவை கவிஞர் கண்ணதாசன் திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். 1958-ம் ஆண்டில் வெளியான ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் மனோரமா அறிமுகமானார். ‘கொஞ்சும் குமரி’ படத்தில் கதாநாயகி ஆனார்.

அதைத்தொடர்ந்து அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. குறிப்பாக, ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் அவர் ஏற்று நடித்த ‘ஜில் ஜில் ரமாமணி’ கதாபாத்திரம் சிவாஜிகணேசன்-பத்மினி கதாபாத்திரங்களுக்கு இணையாக பேசப்பட்டது. இன்று வரை பேசப்படுகிறது.

பாட்டி சொல்லை தட்டாதே, சின்ன கவுண்டர், நடிகன், மைக்கேல் மதன காமராஜன், சிங்காரவேலன், சிங்கம் ஆகிய படங்களில் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார். மனோரமா கடைசியாக நடித்த படம், ‘சிங்கம்-2.’ அவர் 78 வயதில் இயற்கை எய்தினார்.

Next Story