தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்!


தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்!
x
தினத்தந்தி 14 Jun 2021 12:18 PM GMT (Updated: 14 Jun 2021 12:18 PM GMT)

தேசிய விருது வென்ற கன்னட நடிகர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது உடலுறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

பெங்களூரு

'ரங்கப்பா ஹோக்பிட்னா' என்ற திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானவர் சஞ்சாரி விஜய். இவர், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'நான் அவனல்ல அவளு' என்ற படத்தில் திருநங்கையாக நடித்தார்.  அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது.

கடந்த 12ஆம் தேதி சஞ்சாரி விஜய் தன்னுடைய நண்பருடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சறுக்கி அருகே இருந்த விளக்கு கம்பம் மீது மோதியுள்ளது. இதையடுத்து, தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சாரி விஜய்க்கு, மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. 

அதனை நீக்க அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சஞ்சாரி விஜய் இன்று மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

சஞ்சாரி விஜய் மூளைச்சாவு அடைந்ததையடுத்து, அவரது உடலுறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.   


Next Story