சமூக வலைத்தளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு


சமூக வலைத்தளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு
x
தினத்தந்தி 15 Jun 2021 11:32 PM GMT (Updated: 15 Jun 2021 11:32 PM GMT)

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோர் பெயர்களிலும் டுவிட்டரில் போலி கணக்குகளை தொடங்கி உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பெயரில் சமீப காலமாக அதிக அளவில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அவற்றை உண்மை என்று நம்பி ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அந்த கணக்குகளில் சர்ச்சை கருத்துக்களையும் பதிவிடுகின்றனர். மோசடிகளுக்கு இவற்றை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நடிகர்கள் பெயரில் தொடங்கப்படும் போலி கணக்குகளை சம்பந்தப்பட்டவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ரசிகர்களை எச்சரித்து வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு நடிகர்கள் சார்லி, செந்தில் ஆகியோர் தங்கள் பெயர்களில் டுவிட்டரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் அளித்ததன்பேரில் அவை முடக்கப்பட்டன.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோர் பெயர்களிலும் டுவிட்டரில் போலி கணக்குகளை தொடங்கி உள்ளனர். டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்கள் எதிலும் சஞ்சய், திவ்யா சாஷா ஆகிய இருவரும் இல்லை என்றும், எனவே அந்த போலி கணக்குகளை உண்மை என்று நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அவர்கள் தரப்பில் மறுக்கப்பட்டு உள்ளது. விஜய் மகன் சஞ்சய் விரைவில் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Next Story