கங்கனா பாஸ்போர்ட் வழக்கில் புது உத்தரவு


கங்கனா பாஸ்போர்ட் வழக்கில் புது உத்தரவு
x
தினத்தந்தி 17 Jun 2021 8:37 PM GMT (Updated: 17 Jun 2021 8:37 PM GMT)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். மராட்டிய அரசையும் சாடினார்.

கங்கனா ரணாவத் பிரிவினையை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டுவதாகவும், மதங்களை அவமதிப்பதாகவும் மும்பை கோர்ட்டில் தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் கங்கனா தனது பாஸ்போர்ட் காலாவதி ஆவதால் அதனை புதுப்பிக்க பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால் தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து பாஸ்போர்ட் பெறுவதற்காக, வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்கும்படி கோரி கங்கனா மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் எதிர்தரப்பாக பாஸ்போர்ட் அலுவலகத்தை சேர்க்கவில்லை என்றும், உரிய ஆவணங்களை கங்கனா தரப்பில் வழங்கவில்லை என்றும் கூறி விசாரணையை ஜூன் 25-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story