சர்ச்சையில் சிக்கிய சந்தீப் கிஷன்
நடிகர் சந்தீப் கிஷன் சில வருடத்திற்கு முன்பு வெளிவந்த விஜய் படத்தை பற்றி கேலி செய்தும் பின்னர் பாராட்டியும் டுவிட்டரில் பதிவிட்டதால் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
விஜய் நடித்த சுறா படம் வெளியானபோது அதை கேலி செய்து மாநகரம், மாயவன், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன் பதிவுகள் வெளியிட்டு இருந்தார். அதன்பிறகு சில வருடங்கள் கழித்து விஜய்யை பாராட்டினார். இந்த இரண்டு பதிவுகளையும் வைத்து விஜய் ரசிகர்கள் தற்போது சந்தீப் கிஷனை வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மீம்ஸ்களை உருவாக்கியும் அவரை கேலி செய்கின்றனர். இது வலைத்தளத்தில் பரபரப்பானது.
இதற்கு பதில் அளித்து சந்தீப் கிஷன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “இதை நான் யாருக்கும் நிரூபிக்க தேவை இல்லை. ஆனாலும் எனது வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய தோன்றியது. எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும். எனக்கு கஷ்டமான நேரங்களில் பல வகையில் ஊக்கப்படுத்தி இருக்கிறார். இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை.
விஜய் படங்களை பார்த்து ரசித்துத்தான் நான் வளர்ந்து இருக்கிறேன். இடையில் சில காலம் மட்டும் ஒரு வழக்கமான ரசிகனாக தொலைந்து போனேன். ஆனால் கடந்த 10 வருடங்களில் அவரது பயணம் எனக்கு ஊக்கத்தை அளித்து இருப்பதாக பெருமையோடு கூறுவேன். இன்று நான் அவரது மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறேன்” என்றார்.
Related Tags :
Next Story