புதிய தணிக்கை சட்டம்: நடிகர் நாசர் அறிக்கை


புதிய தணிக்கை சட்டம்: நடிகர் நாசர் அறிக்கை
x
தினத்தந்தி 11 July 2021 12:09 AM GMT (Updated: 11 July 2021 12:09 AM GMT)

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சமுதாய முன்னேற்றத்துக்கு திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இருக்கிறது என்பதை வரலாற்று ஏடுகள் ஞாபகப்படுத்துகின்றன. இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தின்போது, அந்த கால திரைப்படங்கள் அந்த உணர்வை மக்களிடையே பரவ செய்தற்கான சாட்சிகள் கருப்பு-வெள்ளை படங்களாக இன்றும் காண கிடைக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் சமுதாய தீர்வை கொண்டுவந்ததில் திரைப்படங்கள் பெரும் பங்காற்றி உள்ளன. இன்றைய சூழலில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா பல கேள்விகளையும், விவாதங்களையும் எழுப்பி இருக்கிறது.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தணிக்கை முறையே போதுமானதாக இருந்தும், இந்த புதிய சட்டம் படைப்பாளிகளின் கருத்துகளை முடக்கும் வகையில் இருக்கிறது. அரசுகள் மக்களின் பிரதிநிதி. மக்கள் உணர்வுகளுக்கு என்றும் செவிசாய்க்க வேண்டும், கருத்தில் கொள்ள வேண்டும். தமிழக மக்களின் பிரதிநிதியாக இருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயம் குறித்து துறை சார்ந்தவர்களின் கவலையை ஆழமாக கேட்டறிந்து அதற்கான முன்னெடுப்பும் எடுத்திருக்கிறார் என்பது எங்களை நிம்மதியடைய செய்வதாக இருக்கிறது. அவருக்கும் நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி சொல்வது கடமை. முதல்-அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் நாசர் கூறி யிருக்கிறார்.

Next Story