கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் மது விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது


Image courtesy : cinespot.net
x
Image courtesy : cinespot.net
தினத்தந்தி 20 July 2021 5:22 AM GMT (Updated: 20 July 2021 5:22 AM GMT)

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

சென்னை

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் தனியாருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இரவு நேரத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மது போதையில் ஆண்கள், பெண்கள் ஜோடியாக குத்தாட்டம் போடுவதாக கானத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவின் பேரில் கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள பண்ணை வீட்டில் மது விருந்து நடைபெற்றது. அங்கு பெண்கள், மதுபோதையில் அரைகுறை ஆடைகளுடன் ஆண்களுடன் சேர்ந்து நடனமாடியபடி இருந்தனர்.

அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ராமாபுரத்தை சேர்ந்த ஸ்ரீஜித்குமார் (வயது 34) என்பவர் சினிமா துணை நடிகை ஒருவருடன் இணைந்து இந்த இரவு நேர மது விருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது.

இந்த விருந்தில் நடனமாட 10 பெண்களை பணம் கொடுத்து அழைத்து வந்திருந்ததும், விருந்தில் கலந்து கொள்ள ஆண் ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வசூலித்ததும் தெரிந்தது.

இதையடுத்து பண்ணை வீட்டில் இருந்த ஸ்ரீஜித்குமார் மற்றும் 10 பெண்கள் உள்பட 16 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். கொரோனா ஊரடங்கின் போது அரசு உத்தரவை மீறியதாகவும், சட்டத்திற்கு புறம்பாக பண்ணை வீட்டில் மது விருந்து நடத்தியதாகவும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் 16 பேரையும் எச்சரிக்கை செய்து போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இதுபற்றி அறிந்த கானத்தூர் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி, அந்த பண்ணை வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தார்.

1994 ஆம் ஆண்டு வெளிவந்த காதலன் படத்தில் முரட்டு போலீஸ் அதிகாரியாக நடித்தவர்  துணை நடிகை கவிதாஸ்ரீ.சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் பண்ணை வீட்டை  சினிமா சூட்டிங்கிற்கு என 2 மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்த  கவிதா ஸ்ரீ அதில் சொகுசு மது விருந்து  நடத்தி வந்துள்ளார்.

மது விருந்து நடத்திய துணை நடிகை கவிதாஸ்ரீ உள்பட பிடிபட்ட 15 மீது போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story