ஆபாசப் படம் எடுத்ததாக புகார்: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது


ஆபாசப் படம் எடுத்ததாக புகார்: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
x
தினத்தந்தி 20 July 2021 6:16 AM GMT (Updated: 21 July 2021 3:19 AM GMT)

ஆபாசப் படங்களைத் தயாரித்து வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை,

மும்பை மலாடு, மத்ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆபாச படம் எடுத்து கொண்டு இருந்த யாஸ்மின் ரோவா கான் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் நடிகை வந்தனா திவாரியையும் கைது செய்தனர்.

பிடிபட்ட கும்பல் சினிமா படவாய்ப்புகள் தேடி அலையும் மாடல் அழகிகளை ஆசை வார்த்தை கூறி ஆபாச படங்களில் நடிக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து கைதானவர்கள் மீது போலீசார் ஆபாச படங்களை பரப்புதல், பொது இடத்தில் ஆபாச செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இதேபோல போலீசார் ஆபாச படம் எடுத்த தயாரிப்பு நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.36½ லட்சத்தையும் முடக்கி இருந்தனர்.

இந்தநிலையில் ஆபாச படம் எடுத்து, செல்போன் செயலிகளில் பதிவேற்றம் செய்த வழக்கில் பிரபல நடிகை சில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ராவுக்கு (வயது45) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மும்பை குற்றப்பிரிவு போலீசார் ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ராவை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கில் ராஜ்குந்த்ரா முக்கிய குற்றவாளி என்றும், இதற்கு வலுவான ஆதாரம் இருப்பதாகவும் மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே கூறினார்.

இதுதொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை அவருக்கு சொந்தமான "ஹாட்சாட்ஸ்" என்ற செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து, அந்த படங்களை பார்க்கும் பார்வையாளர்களிடம் இருந்து சந்தா தொகை பெற்று லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்து உள்ளார். பின்னர் அவர் அந்த செல்போன் செயலியை அவரது உறவினர் பிரதீப் பாக்சியின் கென்ரிவின் நிறுவனத்திற்கு விற்றதும் தெரியவந்தது.

இதேபோல அவரது செல்போன் செயலி நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்த ரியான் தோர்பே என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் போலீசார் நேற்று ராஜ்குந்த்ரா, ரியான் தோர்பேயை மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ராஜ்குந்த்ரா, ரியான் தோர்பே ஆகிய இருவரையும் 23-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதற்கிடையே ராஜ்குந்த்ரா மீது இன்னொரு ஆபாச பட வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். அந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story