ஆபாச பட விவகாரம்: விசாரணையின் போது உடைந்து கதறி அழுத நடிகை ஷில்பா ஷெட்டி


Representational image
x
Representational image
தினத்தந்தி 27 July 2021 8:12 AM GMT (Updated: 27 July 2021 8:12 AM GMT)

ஆபாச பட விவகாரத்தில் இதுவரையில், ஷில்பா ஷெட்டியின் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பை

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி உள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மேலும் சில செயலிகளிலும் ஆபாச படங்களை பதிவேற்றியதில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அதுகுறித்தும் விசாரிக்கின்றனர்.

 ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ராஜ்குந்த்ரா அலுவலக ஊழியர்கள் 4 பேர் ‘அப்ரூவர்’ ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? என்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. 

ராஜ் குந்த்ராவை விசாரணைக்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பு புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அதிகாரிகளால் ஏற்கெனவே ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டி வரவழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மும்பை  குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுத்து விட்டார். இந்த விசாரணையின்போது ராஜ்குந்த்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஷில்பா ஷெட்டி ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் விசாரணையின்போது ஆபாசப் படங்கள் தயாரிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இல்லை என்று அழுத்தமாக நம்புவதாகக் கூறிய ஷில்பா ஷெட்டி, அது முழுக்க, முழுக்க லண்டனைச் சேர்ந்த நபரால் நிர்வகிக்கப்பட்ட செயலி என்றும் பணம் முதலீடு மட்டுமே ராஜ்குந்த்ரா தரப்பில் செய்யப்பட்டது என கூறி உள்ளார்.

ஹாட்ஷாட்ஸ் செயலியில் பதிவேற்றப்படும் மாடல்களின் படங்கள் மற்றும் தங்களுடைய ஓடிடி படங்களில் நடிக்க வரும் மாடல்கள், நடிகைகளுக்கான கவர்ச்சி கட்டுப்பாடு தளர்வு தொடர்பாக ராஜ்குந்த்ரா நடத்தி வந்த வாட்ஸ் அப் குரூப்பில் கிடைத்த கடிதப் பரிவர்த்தனை நகலை ஷில்பா ஷெட்டியிடமும் ராஜ் குந்த்ராவிடமும் காட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த கடிதத்தில், ஓடிடி படங்களில் குறிப்பிட்ட நடிகையை வைத்து படம் எடுப்பதற்கு முன்பாக, அவரை பற்றிய குறிப்புகளை தயாரிப்பு நிறுவனமான தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவரை இறுதி செய்வதில் ஹாட்ஷாட்ஸ் அணியின் முடிவே இறுதியானது. தேர்வாகும் நபர், சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படுபவராக இருக்க வேண்டும். துணிச்சலான காட்சிகளில் மேலாடையின்றியும், பின்புறம் நிர்வாணமாகவும் நடிக்கக் கூடியவராக அந்த நடிகை இருக்க வேண்டும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அதைப் பார்த்த ஷில்பா ஷெட்டி, இதுபோன்ற வரிகள் ஆபாசத்தை தூண்டக்கூடியவை கிடையாது என்றும் அவை முழுக்க, முழுக்க படத்தின் கதைக்கு தேவைப்படும் கவர்ச்சி மட்டுமே என்றும் இதை நீதிமன்றத்தில் உரிய வகையில் தங்களுடைய தரப்பு வாதிடும் என்றும் தெரிவித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரது வாக்குமூலத்தை  பதிவு செய்த பின்னர், ஒரு மூத்த குற்றப்பிரிவு அதிகாரி, இந்த விஷயத்தில் நடிகைக்கு  இதுவரை எந்த தொடர்பும் இல்லை, எனவே மேலும் விசாரணை எதுவும் இருக்காது . இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு எந்தப் பங்கும் இல்லை. இதுவரையில், இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. எனவே நாங்கள் அவரை மீண்டும் விசாரிக்கப் போவதில்லை. ஹாட்ஷாட்ஸுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.

விசாரணையின் போது ஷில்பா ஷெட்டி உடைந்து கூச்சலிட்டார் என்றும், விசாரணையின் போது  உணர்ச்சிபூர்வமான ஷில்பா தனது கணவரிடம் இந்த விஷயம் குடும்பத்தை மோசமாக  சித்தரிப்பதாகவும், பல ஒப்புந்தங்கள் பாதிக்கப்பட்டு, என்னை நம்பி விளம்பர ஒப்பந்தம் செய்தவர்கள் கூட பின்வாங்கி விட்டனர் என  ஷில்பா ஷெட்டி,ராஜ் குந்தராவை கடுமையாக திட்டினார். இந்த ஒரு சம்பவத்தால் இத்தனை ஆண்டுகளாக தான் சம்பாதித்த பேரும் புகழும்  பாதாளத்துக்கு சென்று விட்டதாகவும் அவர் கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story