தோழி இறந்தது தெரியாத நிலையில் யாஷிகா ஆனந்த்; மீண்டும் அறுவை சிகிச்சை


தோழி இறந்தது தெரியாத நிலையில் யாஷிகா ஆனந்த்; மீண்டும் அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 27 July 2021 11:33 PM GMT (Updated: 27 July 2021 11:33 PM GMT)

நடிகை யாஷிகா ஆனந்த் சென்னை கிழக்கு கடற்கரையில் வேகமாக கார் ஓட்டி விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். அதே காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவனி தூக்கி வீசப்பட்டு பலியானார். யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பும், கால் எலும்பும் முறிந்துள்ளது. வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

எலும்பு முறிவை சரிசெய்ய அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. சில தினங்கள் கழித்து மீண்டும் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. இதுகுறித்து யாஷிகாவின் தங்கை ஓஷேன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதபடி வெளியிட்டுள்ள வீடியோவில், “யாஷிகாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை கடவுள் செயலால் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் அவருக்கு இன்னும் நிறைய எலும்பு முறிவுகள் இருப்பதால் அதற்காக மேலும் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே இன்னும் நிறைய அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி இருப்பதால் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

விபத்து குறித்து யாஷிகாவின் குடும்பத்தினர் கூறும்போது, “யாஷிகா சுயநினைவுடன் இருக்கிறார். தோழி பவனி இறந்தது அவருக்கு தெரியாது. எங்களிடம் பவனி எப்படி இருக்கிறார் என்று யாஷிகா விசாரித்தபோது வெண்டிலேட்டரில் இருப்பதாக சொல்லி இருக்கிறோம். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அதிர்ச்சியான விஷயங்களை சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 2 மாதங்கள் கழித்துத்தான் யாஷிகாவால் நடக்க முடியும் என்றும், 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினர்’’ என்றனர்.

Next Story