வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்


வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்
x
தினத்தந்தி 1 Sep 2021 7:01 PM GMT (Updated: 1 Sep 2021 7:01 PM GMT)

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சினையால் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு விதித்த தடையை தயாரிப்பாளர்கள் சங்கம் நீக்கி உள்ளது.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சினையால் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு விதித்த தடையை தயாரிப்பாளர்கள் சங்கம் நீக்கி உள்ளது. இதையடுத்து நாய் சேகர் என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க வடிவேல் தயாராகி உள்ளார். படத்தை சுராஜ் இயக்குகிறார்.

இந்த நிலையில் கிஷோர் இயக்கத்தில் சதீஷ் கதாநாயகனாக நடிக்க நாய் சேகர் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ். பட நிறுவனம் தயாரிக்கிறது. நாய் சேகர் தலைப்பை ஏ.ஜி.எஸ். பதிவு செய்து வைத்துள்ளதால் அதே பெயரை வடிவேல் படத்துக்கு பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

நாய் சேகர் தலைப்பை தந்து விடும்படி வடிவேல் தரப்பில் கோரிக்கை விடுத்தும் கதைக்கு இதுதான் பொருத்தமான தலைப்பு என்று சொல்லி சதீஷ் படக்குழுவினர் கொடுக்க மறுத்துவிட்டனர். ஆனாலும் தலைப்பை வாங்குவதில் வடிவேல் தரப்பில் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.

Next Story