மாணவ-மாணவிகளுக்கு வேண்டுகோள் ‘ஒரு பரீட்சை உயிரைவிட பெரிதல்ல’ நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு


மாணவ-மாணவிகளுக்கு வேண்டுகோள் ‘ஒரு பரீட்சை உயிரைவிட பெரிதல்ல’ நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு
x
தினத்தந்தி 18 Sep 2021 9:12 PM GMT (Updated: 18 Sep 2021 9:12 PM GMT)

‘ஒரு பரீட்சை உயிரைவிட பெரிதல்ல’ என்று மாணவ-மாணவிகளுக்கு வேண்டுகோள் விடுத்து, நடிகர் சூர்யா உருக்கமாக பேசியிருக்கிறார்.

மாணவர்கள் தேர்வில் தோல்வியடைவதால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும்விதமாக உருக்கமான வீடியோ ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே... உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே... மாணவ-மாணவிகள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சம் இல்லாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு கடந்த வாரம் முன்பு இருந்த ஏதோ ஒரு மிகப்பெரிய கவலை, வேதனை இப்போது இருக்கிறதா? யோசித்து பாருங்கள். நிச்சயமாக குறைந்திருக்கும். ஏன், இல்லாமல் கூட போயிருக்கும்.

ஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரியது இல்லை. உங்கள் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறதா? நீங்கள் நம்புகிறவர்கள், உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள், அப்பா, அம்மா, பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என்று யாரிடமாவது எல்லாவற்றையும் மனம் விட்டு பேசிவிடுங்கள்.

இந்த பயம், கவலை, வேதனை, விரக்தி இவையெல்லாமே கொஞ்ச நேரத்தில் மறையும் விஷயங்கள். தற்கொலை... வாழ்க்கையை முடித்து கொள்கிறேன்... என்று முடிவு செய்வதெல்லாம் உங்களை மிகவும் விரும்புகிறவர்களுக்கு, உங்கள் பெற்றோர், குடும்பத்துக்கு நீங்கள் தரும் வாழ்நாள் தண்டனை. மறந்துவிடாதீர்கள்.

நான் எத்தனையோ பரீட்சைகளில் தோல்வி அடைந்திருக்கிறேன். மிக கேவலமான மார்க் வாங்கியிருக்கிறேன். அதனால் உங்களில் ஒருவனாக நிச்சயமாக சொல்லமுடியும். மதிப்பு, தேர்வு இவை மட்டுமே வாழ்க்கையில்லை. சாதிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. உங்களை புரிந்துகொள்ளவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கிறோம். நம்பிக்கையாக, தைரியமாக இருந்தால் எல்லோரும் ஜெயிக்கலாம். பெரிதாக ஜெயிக்கலாம். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

இவ்வாறு சூர்யா கூறியிருக்கிறார்.

Next Story