பெண்களை ஒடுக்குவதாக நடிகை டாப்சி வருத்தம்


பெண்களை ஒடுக்குவதாக நடிகை டாப்சி வருத்தம்
x
தினத்தந்தி 6 Oct 2021 4:47 PM GMT (Updated: 6 Oct 2021 4:47 PM GMT)

தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள டாப்சி தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள டாப்சி தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். சமூகத்தில் பெண்கள் நிலைமை குறித்து டாப்சி அளித்த பேட்டியில், ‘‘அலுவலகத்துக்கு செல்லும் பெண்கள், மனைவிமார்கள், சினிமா துறையில் இருக்கும் பெண்கள் என்று எல்லா துறைகளிலும் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஆண், பெண் வித்தியாசம் பார்க்காத இடம் எதுவுமே இல்லை. பெண்களை எல்லா இடங்களிலுமே அடக்கத்தான் பார்க்கிறார்கள். நான் ராஷ்மி ராக்கெட் என்ற விளையாட்டு கதையம்சம் உள்ள படத்தில் நடித்துள்ளேன். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வித்தியாசம் பார்க்கப்படுவதையும் விளையாட்டு வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எல்லோரும் தெரிந்து கொள்ளவும் இந்த படம் உதவியாக இருக்கும். வீராங்கனைகள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் முன்னுக்கு வர கஷ்டப்படுகின்றனர். அவர்கள் பெண் என்பதால் அடக்கவும், ஒடுக்கவும் பார்க்கிறார்கள். பெண்கள் எத்தனையோ துறைகளில் முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் எல்லா துறைகளிலும் அவர்களை அடக்கும் முயற்சிகள்தான் நடக்கிறது. இது ரொம்ப வேதனையான விஷயம்‘‘ என்றார்.

Next Story