‘எனது நடிப்பை பார்த்து செருப்பை வீசிய ரசிகர்கள்’; ரம்யாகிருஷ்ணன் மலரும் நினைவு


‘எனது நடிப்பை பார்த்து செருப்பை வீசிய ரசிகர்கள்’; ரம்யாகிருஷ்ணன் மலரும் நினைவு
x
தினத்தந்தி 14 Nov 2021 9:43 AM GMT (Updated: 14 Nov 2021 9:43 AM GMT)

தமிழ், தெலுங்கில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரம்யா கிருஷ்ணன் இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கை பற்றிய மலரும் நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், “நான் பிரபல நடன கலைஞராக வேண்டும் என்ற கனவில் எனது அம்மா குச்சிபுடி, பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தார். ஆனால் எதிர்பாராமல் நடிகை ஆனேன். அதன்பிறகு நடன நிகழ்ச்சிகளுக்கு முழுக்கு போட்டுவிட்டேன். சினிமா தான் என் உலகம் என ஆகிவிட்டது. எனக்கு பெரிய பெயர் வாங்கித்தந்த கதாபாத்திரங்களில் படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி முக்கியமானது. ரஜினிகாந்த் பக்கத்தில் ஹீரோயினியாக இல்லாமல் வில்லியாக என்று சொன்னபோது வருத்தப்பட்டேன். சவுந்தர்யா நடித்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டே விருப்பம் இல்லாமல் படப்பிடிப்பை முடித்தேன். 

சினிமா ரிலீசான முதல் நாள் என் தங்கை தியேட்டருக்கு சென்று படம் பார்த்தாள். அங்கு திரையில் என்னை பார்த்தவுடன் அனைவரும் செருப்பை கழட்டி வீச ஆரம்பித்தார்களாம். அதை கேட்ட பிறகு இனி என் கேரியர் முடிந்துவிட்டது என பயந்தேன். ஆனால் ஒரு வாரம் கழித்த பிறகு அந்த படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு எவ்வளவு பெயர் வந்தது என்பதை தெரிந்து மிகவும் ஆனந்தப்பட்டேன். நிறைய நடிகைகள் நீலாம்பரி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு என்று இப்போதும் சொல்வதை கேட்க முடிகிறது'' என்றார்.


Next Story