நடிகர் சல்மான்கானை சந்தித்த இயக்குனர் ராஜமவுலி
மும்பையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கும் ராஜமவுலி சல்மான்கானை சந்தித்துள்ளார்.
மும்பை,
பாகுபலி என்ற ஒரே படத்தால் இந்திய சினிமாவையே புரட்டியவர் ராஜமவுலி. அவரது பாகுபலி 2 படம்தான் இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம். அதன் இந்தி பதிப்பு மட்டுமே 500 கோடிகளை தாண்டி வசூலித்தது. அமீர் கானின் பிகே, சல்மான் கானின் சுல்தான் உள்பட எந்தப் படமும் 400 கோடிகள் என்ற எல்லையையே இதுவரை தொட்டதில்லை.
ராஜமவுலி பாகுபலிக்குப் பிறகு எடுத்திருக்கும் ஆர்ஆர்ஆர் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2022 ஜனவரி 7 படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பலமொழிகளில் வெளியாகிறது. பாகுபலி வசூலை இந்தப் படம் முறியடிக்குமா என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மும்பையில் தனது படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் ராஜமவுலி சல்மான் கானை படப்பிடிப்புதளத்தில் சென்று சந்தித்துள்ளார். அரை மணிநேரம் அவர்கள் பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பை வைத்து ராஜமவுலி சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கக்கூடும் என திரையுலகில் பேச்சு எழுந்துள்ளது.
பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்பட ராஜமவுலியின் அனேகமாக அனைத்துப் படங்களுக்கும் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதியுள்ளார். சல்மான் கானின் கடைசி ஹிட்டான பஜ்ரங்கி பைதான் படத்தின் கதையை எழுதியவரும் விஜயேந்திர பிரசாத்தான்.
ஏற்கனவே ராஜமவுலி குடும்பத்துடன் தொழில் ரீதியாக தொடர்பு உள்ளதால் சல்மான் கான் படத்தை இயக்கக்கூடும் என்று மும்பை சினிமா உலகம் நம்பிக்கையுடன் சொல்கிறது. அதேநேரம், ஆர்.ஆர்.ஆர் படத்தின் புரமோஷனில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவே ராஜமவுலி சல்மான் கானை சந்தித்தார் என உள்வட்டார தகவல்கள் கூறுகின்றன. ஆர்.ஆர்.ஆர் படத்துக்குப் பிறகு ராஜமவுலி மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story