மலையாள நடிகர் திலீப்பிற்கு எதிராக பிரபல இயக்குனர் வாக்குமூலம்


மலையாள நடிகர் திலீப்பிற்கு எதிராக பிரபல இயக்குனர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 8 Jan 2022 7:59 PM GMT (Updated: 8 Jan 2022 7:59 PM GMT)

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப்பிற்கு எதிராக பிரபல இயக்குனர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், நடிகையின் அலறல் வீடியோ காட்சியை திலீப் ரசித்ததாக தெரிவித்துள்ளார்.

நடிகைக்கு பாலியல் தொல்லை

கொச்சியில் மலையாள பிரபல நடிகை ஒருவரை காரில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது. கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 84 நாட்கள் சிறையில் இருந்த அவர், பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

நடிகையை கடத்திய சம்பவத்தில் நடிகர் திலீப் நேரடி தொடர்பில் இல்லை என்ற போதிலும், பாலியல் தொல்லை காட்சியை செல்போனில் (வீடியோ) பதிவு செய்ததாக கைதான சுனில் குமாருக்கும் (பல்சர் சுனி) நடிகர் திலீப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கிடையே நடிகர் திலீப்பின் நண்பரும், பிரபல இயக்குனருமான பால சந்திரகுமார் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திலீப்பிற்கு எதிராக தெரிவித்த கருத்துகள் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணை நடத்த அனுமதி

பின்னர் இந்த கருத்து அடிப்படையில் நடிகர் திலீப்பை மீண்டும் விசாரணை நடத்த கேரள போலீசாருக்கு கொச்சி கோர்ட்டு அனுமதி அளித்தது. மேலும் இம்மாதம் 20-ந் தேதிக்கு முன்னதாக விசாரணையை தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இயக்குனர் வாக்குமூலம்

இதை தொடர்ந்து இயக்குனர் பாலசந்திரகுமாரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் கொச்சியில் விசாரணை நடத்தினர். அப்போது பாலசந்திரகுமார் அளித்த வாக்கு மூலத்தில், நடிகை பாலியல் பலாத்கார துன்புறுத்தலுக்கு ஆளான போது பல்சர் சுனி மற்றும் கூட்டாளிகள் பதிவு செய்த வீடியோ காட்சிகளை நடிகர் திலீப் என்னிடம் காட்டினார். அப்போது அதில் பதிவான சத்தம் குறைவாக இருந்தது. நடிகையின் அலறல் சத்தத்தை அதிகரிக்க கொச்சியில் உள்ள ஒரு ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு அனுப்பி வைத்ததுடன், அதிகரிக்கப்பட்ட நடிகையின் அலறல் சத்தத்தை நடிகர் திலீப் ரசித்து கேட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் ஆய்வு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.


Next Story