8 வருடங்களுக்குப் பிறகு விஷாலுடன் இணைகிறார் ஜி.வி. பிரகாஷ்..!
8 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
சென்னை,
நடிகர் விஷால் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ளது. இந்தப் படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
'மார்க் ஆண்டனி' திரைப்படத்தை வினோத் குமார் தன்னுடைய மினி ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான 'எனிமி' திரைப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான 'நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 8 வருடங்களுக்குப் பிறகு விஷாலுடன் ஜி.வி. பிரகாஷ் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஷால், 'நான் சிகப்பு மனிதன் திரைப்படத்திற்கு பிறகு மார்க் ஆண்டனி படம் மூலம் நண்பர் ஜி.வி. பிரகாஷூடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. 8 வருடங்களுக்குப் பிறகு அவருடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.
Happy to have my dear friend @gvprakash on board for our #MarkAntony after #NaanSigappuManithan. Excited to work with him after 8 long years. GB#V33@iam_SJSuryah@Adhikravi@vinod_offl@RIAZtheboss@UrsVamsiShekar@baraju_SuperHitpic.twitter.com/oubX5basIR
— Vishal (@VishalKOfficial) January 12, 2022
Related Tags :
Next Story