பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை சவுகார் ஜானகிக்கு நடிகர் நாசர் வாழ்த்து..!


பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை சவுகார் ஜானகிக்கு நடிகர் நாசர் வாழ்த்து..!
x
தினத்தந்தி 29 Jan 2022 6:15 PM GMT (Updated: 29 Jan 2022 6:15 PM GMT)

பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள நடிகை சவுகார் ஜானகிக்கு தமிழ் நடிகர், நடிகைகள் சார்பில் நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவரான நடிகை சவுகார் ஜானகிக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த சவுகார் ஜானகி, தன்னுடைய 19-வது வயதில் என்.டி.ராமராவ் நடித்த சவுகார் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 

70 வருடங்கள் சினிமாவில் நடித்துள்ள சவுகார் ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அவர் மிகவும் பிரபலமாக விளங்கினார்.

இந்த நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள நடிகை சவுகார் ஜானகிக்கு தமிழ் சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் சார்பில் நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'ஓ எங்கள் ‘சவுகார்’ அம்மா.. அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்! ஒன்றில் கண்டது, இன்னொன்றில் இல்லை. புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி! ‘புதிய பறவையில்’ மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடிக்கண்களா? ஆச்சர்யம்! கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்!! 

தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய் இன்று 'பத்மஶ்ரீ' உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். 'பத்மஶ்ரீ' விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்' என்று அவர் கூறியுள்ளார்.

Next Story