நடிகைகள் பாதுகாப்புக்கு நடிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு


நடிகைகள் பாதுகாப்புக்கு நடிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு
x
தினத்தந்தி 21 Oct 2018 10:30 PM GMT (Updated: 21 Oct 2018 9:01 PM GMT)

நடிகைகளை பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது.

தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீது தினமும் ‘மீ டூ’ வில் பாலியல் புகார் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கவிஞர் வைரமுத்து வெளிநாட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம் சாட்டினார். மேலும் சில பெண்கள் பாலியல் புகார் கூறிய பதிவையும் டுவிட்டரில் பகிர்ந்தார்.

நடிகர்கள் ஜான் விஜய் மீது பாடகியும் டெலிவிஷன் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஸ்ரீரஞ்சனி பாலியல் புகார் கூறியுள்ளார். டைரக்டர் சுசிகணேசன் மீது பெண் டைரக்டர் லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். நகைச்சுவை நடிகர் டி.எம்.கார்த்திக் மீதும் புகார் கூறப்பட்டது.

இப்போது முன்னணி நடிகர்களான அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரனும் தியாகராஜன் மீது பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனனும் பாலியல் புகார் கூறியுள்ளனர். இந்த நிலையில் நடிகைகளை பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“திரைப்படம் மற்றும் நாடகம் உருவாகின்ற படப்பிடிப்பு தளங்களில் பாலின வேறுபாடின்றி கலைஞர்களுக்கு மன அழுத்தமோ, அச்சுறுத்தலோ இன்றி சுதந்திரமாக சுயமரியாதையோடு, தங்கள் கலையை செயல்படுத்தும் சூழலை தக்க வைத்துக்கொள்ளவும் பாதுகாக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாய் கவனம் மேற்கொள்ளும். அவ்வகையில் அதை செயல்படுத்தி கண்காணிக்க குழு ஒன்றையும் அமைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story