பார்வதியின் இரக்க குணம்


பார்வதியின் இரக்க குணம்
x
தினத்தந்தி 1 Jun 2019 10:21 AM GMT (Updated: 1 Jun 2019 10:21 AM GMT)

சமீபத்தில் வெளியான ‘உயரே’ படம், பார்வதிக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்துள்ளது.

‘உயரே’  படத்தில் பைலட்டாகவும், ஆசீட் வீச்சில் பாதிக்கப்பட்ட தோற்றத்திலும் நடித்திருந்த பார்வதியின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வைரஸ்’ திரைப்படம் வருகிற 7-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆசிப் அலி, டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், ரேவதி, ரீமா கல்லிங்கல் உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ஆசிக் அபு இயக்குகிறார். கேரளத்தில் பல பேர் உயிரை காவு வாங்கிய ‘நிபா வைரஸ்’ பற்றியும், அந்த நோயால் பாதிக்கப்பட்ட லினி என்ற நர்சின் இறுதிகட்ட வாழ்க்கை போராட்டம் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தில் லினி என்ற கதாபாத்திரத்தில் ரீமா கல்லிங்கல் நடிக்கிறார்.

இதற்கிடையில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்த லினியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. அதில் நடிகை பார்வதி கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய லினியின் கணவர், “லினி இறந்த இரண்டாவது நாளிலேயே எனக்கு பார்வதி போன் செய்தார். என்னுடைய இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவையும் அவரே பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார். அதன்படியே செய்து வருகிறார். அவர் உதவி செய்யும் மனம் கொண்டவராக இருக்கிறார்” என்றார்.

Next Story