ஜீத்து ஜோசப்புடன் மீண்டும் மோகன்லால்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மீண்டும் மோகன்லால் நடிக்க இருக்கிறார்.
மலையாளத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, அதிரிபுதிரி வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்.’ மோகன்லால்- மீனா நடிப்பில் உருவாகி இருந்த இந்தத் திரைப்படத்தை திரில்லர் திரைப்படங்களுக்குப் பெயர் போன, ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். மலையாளத்தில் ரூ.50 கோடி வசூல் என்ற சாதனையை முதன் முதலில் எட்டிய திரைப்படமாகவும் ‘த்ரிஷ்யம்’ தடம் பதித்தது. எல்லா மொழிகளுக்கும் ஏற்ற கதையாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும் கதைக் களமாகவும் இருந்த காரணத்தால், இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்தார்கள். அனைத்து மொழிகளிலும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுக்கொடுத்த திரைப்படம் இது என்றால் அது மிகையல்ல. இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மீண்டும் மோகன்லால் நடிக்க இருக்கிறார். 100 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடைபெற உள்ள, இந்தப் படத்தை மோகன்லாலின் சொந்த நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கிறது. இந்தப் படமும் எமோசனல் திரில்லர் கதைக் களமாகத்தான் உருவாக உள்ளதாம். தற்போது கார்த்தி, ஜோதிகா ஆகியோரை வைத்து தமிழ் மொழியில் ஒரு படத்தை இயக்கி வரும் ஜீத்து ஜோசப், அதன் பணிகள் முடிவடைந்ததும் நவம்பரில் மோகன்லால் படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story