25 ஆண்டுகளுக்குப் பின் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அரவிந்த் சாமி


25 ஆண்டுகளுக்குப் பின் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அரவிந்த் சாமி
x
தினத்தந்தி 15 Sep 2021 5:46 PM GMT (Updated: 15 Sep 2021 5:46 PM GMT)

தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் அரவிந்த் சாமி, சமீபத்தில் வெளியான தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்திருந்தார்.

தமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். தற்போது ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘கள்ளபார்ட்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி, புதிதாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஒட்டு’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் குஞ்சக்கோ போபன் உடன் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அரவிந்த் சாமி நடிப்பதால் இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் உருவாக்குகின்றனர். தமிழில் இப்படத்திற்கு ‘ரெண்டகம்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

அரவிந்த் சாமி கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘தேவராகம்’ எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘ஒட்டு’ படம் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அரவிந்த் சாமி, நேரடி மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story