மாநகரம்


மாநகரம்
x
தினத்தந்தி 16 March 2017 8:09 AM GMT (Updated: 16 March 2017 8:08 AM GMT)

சாப்ட்வேர் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ரெஜினாவை வேலையில்லாமல் சுற்றும் சந்தீப் கி‌ஷன் காதலிக்கிறார்.

கதையின் கரு: ரவுடிகளால் 2 இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்

 அவருக்கும், ரவுடி ஒருவனுக்கும் மோதல் ஏற்படுகிறது. ரெஜினா பணிபுரியும் நிறுவனத்தில், ஸ்ரீக்கு வேலை கிடைக்கிறது.

அப்போது, சந்தீப் கி‌ஷனை தாக்க வரும் ரவுடிகளிடம் ஆள்மாறாட்டத்தில் ஸ்ரீ சிக்கிக் கொள்கிறார். அதில், அவருடைய சான்றிதழ்கள் பறிபோகின்றன. இன்னொரு புறம் சிறுவர்களை கடத்துவதன் மூலம் பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகள் தவறுதலாக தாதாவின் மகனை கடத்தி விடுகின்றனர். அவர்களை தீர்த்துக்கட்ட தாதாவின் ஆட்கள் தேடுகிறார்கள். அதே தாதாவின் காரை வாடகைக்கு ஓட்டுகிறார், சார்லி. அவருடைய காரில் இரவு பணிமுடிந்து ரெஜினாவும், ஸ்ரீயும் பயணிக்க நேர்கிறது. அந்த இரவில் நடக்கும் பயங்கரங்கள், மீதி கதை.

காதலியை மணக்கும் லட்சியத்தில் சென்னைக்கு வேலை தேடி வரும் ஸ்ரீ, கதாபாத்திரத்தில் யதார்த்தமாய் பதிகிறார். சான்றிதழ்களை இழந்து தவிக்கும்போது, பரிதாபம். சார்லியை காப்பாற்ற ரவுடிகளுடன் மோதும்போது, ஆக்ரோ‌ஷம். தன் கஷ்டத்தை பொருட்படுத்தாமல், சார்லியின் குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்க முயற்சிக்கும்போது, ஸ்ரீயின் கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது.

சந்தீப் கி‌ஷன் முற்போக்கு சிந்தனையான முரட்டு இளைஞனாக வருகிறார். காதலிக்க மறுத்த பெண் முகத்தில் திராவகம் வீசுவதாக மிரட்டும் ரவுடி மீது பஸ்சுக்குள் அதே பாணியில் திராவகத்தை வீசும் காட்சியில், மிரட்டல். ரெஜினாவுக்கும், சந்தீப் கி‌ஷனுக்குமான காதலிலும் ஜீவன் இருக்கிறது. சிறுவனை மீட்கும் கிளைமாக்ஸ் காட்சியில், சந்தீப் கி‌ஷன் அதிர வைக்கிறார்.

அவருடன் காதலும் வெறுப்புமாக இருக்கும் ரெஜினா கதாபாத்திரம், ரசனையானது. குழந்தை கடத்தும் ரவுடிகளுக்கு கையாளாக வரும் ராம்தாஸ் தியேட்டரை கலகலப்பாக வைத்து இருக்கிறார். டிரைவராக வரும் சார்லி, தாதாவாக வரும் மதுசூதனன் கதாபாத்திரங்களும் வலு சேர்க்கின்றன. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் காட்சிகள் பிற்பகுதியில் காதல், அதிரடி, சஸ்பென்ஸ், திருப்பங்கள் என வேகம் எடுக்கிறது.

வெவ்வேறு திசையில் பயணிக்கும் கதைகளை, ஒரே புள்ளியில் சாமர்த்தியமாய் இணைத்துள்ள டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பாராட்டுக்குரியவர். ஜாவேத் ரியாஸ் பின்னணி இசை, கதையோட்டத்துக்கு வேகம் சேர்க்கிறது. செல்வகுமார் கேமரா, இரவு காட்சிகளில் திகிலூட்டுகிறது.

Next Story