விக்ரம் வேதா


விக்ரம் வேதா
x
தினத்தந்தி 25 July 2017 5:24 PM GMT (Updated: 25 July 2017 5:24 PM GMT)

கதையின் கரு: போலீஸ் அதிகாரி, தாதா மோதல். கொலை, போதை பொருள் கடத்தல் என்று நகரத்தையே கலக்கும் தாதா விஜய் சேதுபதியை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லும் பொறுப்பை போலீஸ் அதிகாரி மாதவனிடம் மேலதிகாரி ஒப்படைக்கிறார்.

விஜய் சேதுபதி, கூட்டாளிகளுடன் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வர போலீஸ் படையுடன் அங்கு முற்றுகையிடுகிறார். இருதரப்புக்கும் நடக்கும் சண்டையில் விஜய் சேதுபதியின் அப்பாவி தம்பி கதிர் குண்டு பாய்ந்து இறக்கிறார்.

விஜய் சேதுபதி அங்கு இல்லை என்பதை அறிந்து மாதவன் ஏமாற்றமாகிறார். தம்பி பலியானதும் விஜய்சேதுபதி தானாக போலீசில் சரண் அடைகிறார். அப்போது தாதாவாக மாறிய தனது பிளாஸ்பேக் கதையை மாதவனுக்கு சொல்லி தவறுகளை நியாயப்படுத்துகிறார். வக்கீலாக வேலை பார்க்கும் மாதவன் மனைவி ஷிரத்தா, விஜய் சேதுபதியின் வழக்கை கையில் எடுத்து அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வருகிறார். இதனால் மனைவி மீது மாதவன் எரிச்சலாகிறார்.

மாதவனுடன் பணியாற்றும் பிரேம், விஜய் சேதுபதியை தனியாக பிடிக்கப்போய் மர்மமாக சாகிறார். அங்கு கதிர் காதலி வரலட்சுமியும் பிணமாக கிடக்கிறார். இருவருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவரையொருவர் சுட்டு பலியானதாக போலீஸ் முடிவுக்கு வருகிறது. விஜய் சேதுபதியை மாதவன் மீண்டும் கைது செய்து என்கவுண்ட்டரில் கொல்ல முயற்சிக்கிறார். அப்போது பிரேம் ரவுடிகளிடம் பணம் வாங்கி இரட்டை வேடம் போட்டதாக பகீர் தகவலை சொல்லி விட்டு விஜய்சேதுபதி தப்புகிறார்.

விஜய் சேதுபதியையும் தன்னையும் மோதவிட்டு பின்னால் ஏதோ சதி நடப்பதாக மாதவன் சந்தேகித்து அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். சதிகாரர்கள் யார் என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.

மாதவன் நேர்மையான போலீஸ் அதிகாரியாக மனதில் நிற்கிறார். என்கவுண்ட்டர் பதற்றத்திலும் அலட்டிக்கொள்ளாமல் சக போலீசாருடன் தமாஷ் செய்து கலகலக்க வைப்பது, விஜய்சேதுபதியிடம் சொந்த கதைகளை கேட்டு நெகிழ்ச்சியாவது ரசிக்க வைக்கிறது. நண்பன் பிரேம் பலியான தகவலை அவரது மனைவியிடம் நீர் ததும்பிய விழிகளால் உணர்த்தும் காட்சியில் உருக வைக்கிறார். சண்டையிலும் வேகம்.

விஜய் சேதுபதி பயமில்லாமல் தனியாக நடந்து சென்று போலீஸ் நிலையத்தில் சரணடையும் ஆரம்ப காட்சியிலேயே அசர வைக்கிறார். சாதாரண ஆளாக இருந்து கடத்தல் கொலைகள் என்று பெரிய தாதாவாக வளரும் காட்சிகளில் விறுவிறுக்க வைக்கிறார். தம்பி பாசத்தில் அழுத்தம். ஷிரத்தா வசீகரிக்கிறார். படுக்கையில் நெருக்கம் காட்டி இருக்கிறார். வரலட்சுமி, கதிர், பிரேம் கதாபாத்திரங்களும் கச்சிதமாக உள்ளன.

கதைக்குள் கதை சொன்ன யுக்தியில் குழப்பம் வருகிறது. தாதாக்களின் நிழல் உலகத்தை அழுத்தமான திரைக்கதையில் விறுவிறுப்பாக காட்சிபடுத்தி இருக்கிறார்கள் டைரக்டர்கள் புஷ்கர்–காயத்ரி. சஸ்பென்ஸ் முடிச்சுகள் அவிழ்வதும் கிளைமாக்சும் நிமிர வைக்கிறது. சாம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை ஒன்றவைக்கிறது. வினோத் கேமரா வடசென்னை பகுதியை கண்களில் பதிக்கிறது.

Next Story