மீசைய முறுக்கு


மீசைய முறுக்கு
x
தினத்தந்தி 25 July 2017 5:31 PM GMT (Updated: 25 July 2017 5:31 PM GMT)

கதையின் கரு: சினிமா இசையமைப்பாளராக ஆசைப்படும் ஒரு இளைஞர். ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு சின்ன வயதில் இருந்தே இசை மீது ஆர்வம்.

பள்ளி–கல்லூரிகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நண்பர்களின் பாராட்டுகளை சம்பாதிக்கிறார். என்றாவது ஒருநாள் தன் திறமைக்கு மரியாதை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், அவருக்கு காதல் வருகிறது. அவருடைய காதலி, ஆத்மிகா. இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கிறார்கள். கல்லூரியில் படித்துக் கொண்டே இசையமைப்பாளர் ஆக முயற்சிக்கிறார், ஆதி. இதற்காக அவர் கோவையில் இருந்து சென்னைக்கு போகிறார். அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.

ஆத்மிகாவுக்கு அவருடைய பெற்றோர்கள் வேறு ஒரு மாப்பிள்ளையுடன் திருமணம் நிச்சயிக்கிறார்கள். ஆத்மிகா, ஆதியை சந்தித்து பேசுகிறார். ‘‘வேலை வெட்டி இல்லாமல் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். அதனால், நான் வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறேன். நீ, உன் லட்சியம் நிறைவேற தொடர்ந்து முயற்சி செய்’’ என்கிறார்.

காதலியின் அறிவுரையை ஆதி ஏற்றுக் கொண்டாரா, அவருடைய லட்சியத்தில் வென்றாரா? என்பது மீதி கதை.

ஆதி, தன் சொந்த கதையை படமாக்கி இருப்பார் போலும். கதையிலும், சில காட்சிகளிலும் அத்தனை உயிரோட்டம். கல்லூரி மாணவராக, இசை துறையில் பிரபலமாக முயற்சி செய்யும் இளைஞராக, கதாபாத்திரத்துடன் பொருந்துகிறார். ஆத்மிகாவின் காதலை சம்பாதித்த பெருமையில் அவர் துள்ளும்போது அவர் உற்சாகமாகி, படம் பார்ப்பவர்களையும் உற்சாகப்படுத்துகிறார். அவமானங்களையும், அவமரியாதைகளையும் சகித்துக் கொள்ளும் இடங்களில், நெகிழ வைக்கிறார்.

ஆத்மிகா, ஒரு கோணத்தில் அழகாகவும், இன்னொரு கோணத்தில் முதிர்ச்சியாகவும் தெரிகிறார். ‘‘இருவரும் பிரிந்து விடலாம்’’ என்று இவர் ஆதியிடம் சொல்லும் காட்சியில், உருக்கம்.

ஆதியின் அப்பாவாக விவேக். மகனுக்கு அவ்வப்போது அறிவுரை சொல்கிற பொறுப்புள்ள தந்தையாக விவேக்கின் கதாபாத்திரமும், நடிப்பும் இயல்பாக இருக்கிறது. அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் அமோக வரவேற்பு. அம்மாவாக விஜயலட்சுமி. அழகான அம்மாக்கள் வரிசையில், இனி விஜயலட்சுமியும்... கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிற கதாபாத்திரத்தில், மா.கா.பா.ஆனந்த்.

கிருதி வாசன்–யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவும், ஆதியின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு வேகம் கூட்டுகின்றன. முதல் படத்திலேயே நல்ல டைரக்டர் என்று பாஸ் மார்க் வாங்கி விடுகிறார், ஆதி. படத்தில், கதை என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. ஆனாலும், திரைக்கதையில் விறுவிறுப்பையும், ஜனரஞ்சகத்தையும் கொண்டு வந்து விடுகிறார், டைரக்டர் ஆதி. குறிப்பாக, பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம், இளைஞர்களுக்கான திருவிழா.

Next Story