பொதுவாக எம்மனசு தங்கம்


பொதுவாக எம்மனசு தங்கம்
x
தினத்தந்தி 12 Aug 2017 11:35 PM GMT (Updated: 12 Aug 2017 11:35 PM GMT)

கதையின் கரு: 2 கிராமங்களுக்கு இடையேயான மோதல். பக்கத்து ஊர் கோவில் திருவிழாவில் தனது மகளுக்கு காது குத்தி மொட்டையடிக்க முடியாத கோபத்தை பார்த்திபன் தனது மனதில் வைத்துக் கொண்டு,

அந்த ஊரையே காலி செய்ய நினைக்கிறார். அதற்கு உடன்படாமல், தனது ஊருக்கு நன்மை செய்து வருகிறார், உதயநிதி. மற்றவர்களை ஊரை விட்டு விரட்டியது போல், உதயநிதி ஸ்டாலினையும் ஊரை விட்டு விரட்ட திட்டம் போடுகிறார், பார்த்திபன்.

அவருடைய சதித்திட்டங்களில் இருந்து தப்புகிற உதயநிதி, பார்த்திபனின் மகள் நிவேதா பெத்துராஜை காதலிக்கிறார். நிவேதாவும் உதயநிதியை விரும்புகிறார். இந்த காதல் விவகாரம், பார்த்திபனின் காதுக்கு போகிறது. மகளை, உதயநிதியிடம் இருந்து பிரிக்க முயற்சிக்கிறார், பார்த்திபன்.
இந்த நிலையில், தனது கிராமத்தை சேர்ந்தவர்களை ஊரை விட்டு காலி செய்ய வைப்பது பார்த்திபன்தான் என்ற உண்மை உதயநிதிக்கு தெரியவருகிறது. அவர் தனது காதலையும், ஊர் மக்களையும் பார்த்திபனிடம் இருந்து எப்படி மீட்டெடுக்கிறார்? என்பது மீதி கதை.

கிராமத்து கதையில் முதன்முதலாக உதயநிதி. அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி அவருக்கு கச்சிதமாக பொருந்துகிற கதாபாத்திரம். காமெடியில், கலக்குகிறார். கூடவே சூரியை சேர்த்துக் கொண்டு படம் முழுக்க சிரிக்க வைக்கிறார், உதயநிதி. இவருக்கும், நிவேதாவுக்குமான காதலும், மோதலும் படத்துக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது. உதயநிதிக்கும், பார்த்திபனுக்குமான நீயா, நானா? போட்டிகள், ரசிக்கும்படி இருக்கிறது.

நிவேதா பெத்துராஜுக்கு வசீகர முகம். கிராமத்து அழகியாக மனதில் பதிகிறார். பாடல் காட்சிகளில், சிம்ரனைப் போல் இடுப்பை வெட்டி வெட்டி ஆடுகிறார்.

கண்களை உருட்டி மிரட்டாத-கலகல வில்லனாக பார்த்திபன். இவர் வருகிற காட்சிகள் அனைத்தும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. சூரியின் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் சிரிக்க வைக்கின்றன. பார்த்திபன் கூடவே வருகிற மயில்சாமியும் கலகலப்பூட்டுகிறார்.

டி.இமான் இசையில், “அம்மணி நீ,” “என்னான்னு சொல்வேன்” ஆகிய 2 பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் வாத்தியங்களின் சத்தம் மிகையாக இருக்கிறது. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது. 2 கிராமங்களுக்கு இடையே நடைபெறும் மோதல்கள், இதற்கு முன்பு நிறைய முறை பார்த்ததுதான். கதை சொன்ன விதத்தில், வித்தியாசம் காட்டியிருக்கிறார், டைரக்டர் தளபதி பிரபு. விறுவிறுப்பான திரைக் கதை கூடுதல் மார்க்குகளை அள்ளுகிறது.



Next Story