தீரன் அதிகாரம் ஒன்று


தீரன் அதிகாரம் ஒன்று
x
தினத்தந்தி 21 Nov 2017 6:39 AM GMT (Updated: 21 Nov 2017 6:39 AM GMT)

வட இந்திய கொள்ளை கும்பலை பிடிக்க போராடும் தமிழக போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்.

கதையின் கரு:  10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொள்ளையடித்த வட இந்திய முகமூடி கொள்ளையர்களை, தமிழக போலீஸ் அதிகாரி ஜாங்கிட் தலைமையில் ஒரு போலீஸ் படை ராஜஸ்தான் சென்று பிடித்த உண்மை சம்பவமே இந்த படத்தின் கரு. போலீஸ் அதிகாரியாக கார்த்தி வருகிறார். அவருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் ரகுல் ப்ரீத்சிங்குக்கும் காதல். இருவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக உள்ள வீட்டில் கார்த்தியும், ரகுல் ப்ரீத்சிங்கும் தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள். ரகுல் ப்ரீத்சிங் கர்ப்பமாகிறார்.

இந்த நிலையில், சென்னையில் அடுத்தடுத்து பல கொள்ளைகள் நடக்கின்றன. வீட்டில் உள்ளவர்களை கொலை செய்து விட்டு, பணம்-நகைகளை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. டி.எஸ்.பி. கார்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்படுகிறது. கொள்ளையர்களை பற்றி கார்த்தி துப்பறிந்து தனிப்படை போலீசாருடன் ராஜஸ்தான் செல்கிறார். கொள்ளையர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரு கிராமத்தில் வசிப்பதை கண்டுபிடிக்கிறார்.

அவர்களை கார்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய முயற்சிக்கும்போது, ஊரே திரண்டு வந்து போலீசாரை அடித்து விரட்டுகிறது. முதல் முயற்சியில் தோல்வி அடைந்த கார்த்தியும், தனிப்படை போலீசாரும் அடுத்த முயற்சியில் எப்படி வெற்றி பெறுகிறார்கள்? என்பதே ‘தீரன் அதிகாரம் ஒன்று.’

துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி தீரன் திருமாறனாக கார்த்தி. காக்கி சட்டைக்கு கம்பீரம் சேர்த்து இருக்கிறார். வீட்டில் தங்கையிடம், “செல்லக்குட்டி, அண்ணனுக்கு ஒரு காபி எடுத்துட்டு வா” என்று குழைவதில் ஆரம்பித்து, காதல் மனைவி ரகுல் ப்ரீத்சிங்கின் அழகை வர்ணிப்பது வரை, கலகல கார்த்தி. முகமூடி கொள்ளையர்கள் நடத்தும் கொலை-கொள்ளை சம்பவங்கள் ஆரம்பமானதும், கார்த்தி அதிரடி ‘ஆக்‌ஷன்’ அவதாரம் எடுக்கிறார். பதற்றமூட்டும் சண்டை காட்சிகளும், கார்த்தியின் சாகசங்களும் இருக்கை நுனியில் உட்கார வைக்கின்றன. 2 பஸ்களுக்கு நடுவில் அவரும், கொள்ளை கும்பல் தலைவனும் மோதுகிற சண்டை காட்சி, ஒரு உதாரணம்.

ரகுல் ப்ரீத்சிங் காதலையும், அதன் தவிப்புகளையும் அழகாக முகத்தில் வெளிப்படுத்துகிறார். “என்னை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொள்” என்று அவர் கார்த்தியிடம் சொல்வதும், “இன்னும் எட்டு மாதங்களில் என்னை மாதிரி ஒரு குட்டி பாப்பா வந்துடும்” என்று வெட்கத்துடன் கூறுவதும்-ரசிக்க வைக்கும் வெதுவெதுப்பான காட்சிகள். இத்தனை எதிர்பார்ப்புடன் கூடிய அந்த கரு, கொள்ளையர்களால் கலைந்து போன காட்சியில், கலங்க அடித்து இருக்க வேண்டாமா? படத்தில், அதன் பாதிப்பு தெரியவில்லை.

கார்த்தியுடன் பயணிக்கும் இன்னொரு போலீஸ் அதிகாரியாக போஸ் வெங்கட், ரகுல் ப்ரீத்சிங்கின் அப்பாவாக மனோபாலா ஆகிய இருவரையும் தவிர மற்ற கதாபாத்திரங்களில், தெரியாத வட இந்திய முகங்கள்.
படத்தின் இன்னொரு கதாநாயகன், சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு.

அபாயகரமான இரவுகளையும், பரந்து விரிந்த பாலைவனத்தையும், உயிரோட்டமாக படம் பிடித்து இருக்கிறது, கேமரா. ஜிப்ரானின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்க்கின்றன. திருடன்-போலீஸ் கதையை ஒரு திகில் படத்துக்குரிய விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார், டைரக்டர் எச்.வினோத். முகமூடி கொள்ளையர்கள் வரும் காட்சிகள், பதற வைக்கின்றன.
ஒட்டு மொத்த படமும் சூப்பர் வேகம்.

Next Story