படை வீரன்


படை வீரன்
x
தினத்தந்தி 3 Feb 2018 10:52 PM GMT (Updated: 3 Feb 2018 11:02 PM GMT)

மறுபடியும் மண்வாசனையுடன், சாதி சண்டைகளை பற்றிய படம். ராஜவேல் மோகனின் கேமரா, கிராமத்து யதார்த்தங்களை ரசனையுடன் பதிவு செய்திருக்கிறது. "படை வீரன்" படத்தின் சினிமா விமர்சனம் .

அய்யனார் பட்டி, எடையகுளம் ஆகிய 2 கிராமங்களுக்கும் இடையே சாதி வெறி காரணமாக பகை இருந்து வருகிறது. அய்யனார்பட்டியை சேர்ந்த இளைஞர் விஜய் ஏசுதாஸ் நண்பர்களுடன் வெட்டியாக ஊர் சுற்றி வருகிறார். அவரிடம், போலீஸ் வேலைக்கு போனால் சரக்கும், சாப்பாடும் இலவசமாக கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறார்கள். “இரண்டு லட்சம் ரூபாய் கொண்டு வா...போலீஸ் வேலையில் சேர்த்து விடுகிறேன்” என்று அதே ஊரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பாரதிராஜா, ஆசை காட்டுகிறார்.

விஜய் ஏசுதாஸ் இரண்டு லட்சம் ரூபாயை புரட்டிக் கொடுத்து, போலீஸ் வேலையில் சேருகிறார். இந்த நிலையில், அய்யனார்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், எடையகுளத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் காதல் ஏற்படுகிறது. சாதி வெறி பிடித்த எடையகுளம் தலைவர், காதலர்கள் இருவரையும் கவுரவ கொலை செய்து விடுகிறார். 2 கிராமங்களுக்கும் இடையே மீண்டும் தீப்பற்றிக் கொள்கிறது.

இந்த நிலையில், 2 ஊர்களுக்கும் பொதுவாக இருக்கும் கோவில் திருவிழா வருகிறது. திருவிழா பின்னணியில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்க சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இதை எதிர்பார்த்து போலீஸ் உஷாராகிறது. 2 ஊர்களிலும் ஆயுத போலீசை கொண்டு வந்து குவிக்கிறது. அந்த போலீஸ் படையில், விஜய் ஏசுதாசும் இருக்கிறார். கலவரத்தை அவர் அடக்கினாரா, கலவரம் அவரை அடக்கியதா? என்ற கேள்விகளுக்கு கனமான ‘கிளைமாக்ஸ்’ விடையளிக்கிறது.

நண்பர்களுடன் சேர்ந்து கேலியும் கிண்டலுமாக அலைகிறவராக - திருவிழாவில் கரக ஆட்டக்காரியுடன் ஜோடியாக ஆடுபவராக - குடிப்பதற்கு பாட்டியின் நகைகளை ஆட்டையை போடுபவராக விஜய் ஏசுதாஸ், படம் முழுக்க கிராமத்து இளைஞராக கலக்கியிருக்கிறார். பிசிறு இல்லாமல் மதுரை தமிழ் பேசி, ஆச்சரியப்படுத்துகிறார். முறைப்பெண்ணுக்கு வருகிற வரன்களை எல்லாம் இவர் நண்பர்களுடன் சேர்ந்து கேலி செய்து, “ஒரு ஆம்பளைக்கு ஏன் இன்னொரு ஆம்பளை? நல்ல பொண்ணாக பார்த்து கல்யாணம் செய்து கொள்” என்று கலாட்டா செய்வதும், அந்த முறைப்பெண் சீவி சிங்காரித்து அழகு காட்டுவதும், அவருடைய அழகில் மெதுவாக விஜய் ஏசுதாஸ் மனதை பறி கொடுப்பதும், சுவாரஸ்யமான காட்சிகள்.

பாரதிராஜா, ஒரு கிராமத்து பெரியவராக வாழ்ந்திருக்கிறார். அவருடைய நடை-உடை-பாவனை-வசன உச்சரிப்பு அத்தனையிலும் கிராமிய வாசனை தூக்கலாக தெரிகிறது. “ஆண்டவன் பரம்பரை பற்றி பேஸ்புக்கில் எழுதுகிறார்கள். அப்படி பார்த்தால் வெள்ளைக்காரனும் ஆண்டவன் பரம்பரைதானே...” என்று அவர் தத்துவம் பேசுவதும், “விவசாயி மகன் கலெக்டர் ஆகிறான்...எலக்ட்ரீசியன் மகன் என்ஜினீயர் ஆகிறான்...மர வேலை பார்த்தவன் மந்திரி ஆகிறான்...” என்ற அவரின் ஆதங்கமும் ரசிக்க வைக்கின்றன.

கதாநாயகி அம்ரிதா, மிக பொருத்தமான தேர்வு. அவரின் உதட்டு சுளிப்பும், தெத்துப்பல் சிரிப்பும், காதல் வீசும் கண்களும், அழகு. நடிப்பிலும் ஒரு கிராமத்து பெண்ணாக கண்ணுக்குள் நிற்கிறார். இப்படி கதாபாத்திரங்களுடன் கச்சிதமாக பொருந்துகிற முகங்களாக தேடிப்பிடித்து நடிக்க வைத்ததற்காக டைரக்டர் தனாவை பாராட்டலாம்.

கதாநாயகன் விஜய் ஏசுதாசுக்கு நினைத்ததும் போலீஸ் வேலை கிடைப்பதும், போலீஸ் முகாமில் இருந்து ஓடிப்போகும் அவரை தேடிப்பிடித்து இழுத்து செல்வதும், நம்பமுடியாத காட்சிகள்.

ராஜவேல் மோகனின் கேமரா, கிராமத்து யதார்த்தங்களை ரசனையுடன் பதிவு செய்திருக்கிறது. கார்த்திக் ராஜா இசையில் பாடல்களில் மென்மையான ராகங்கள். பின்னணி இசை, காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்திருக்கிறது.

Next Story