கலகலப்பு-2


கலகலப்பு-2
x
தினத்தந்தி 16 Feb 2018 5:36 PM GMT (Updated: 16 Feb 2018 5:36 PM GMT)

கதாநாயகன்-கதாநாயகி: ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி. டைரக்‌ஷன்: சுந்தர் சி. "கலகலப்பு-2" படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  ஒரு சாமியார் தனது பக்தர்கள் மத்தியில் ஆன்மிக உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, அவரை கொல்வதற்கு பாய்கிறார், ஜெய். சாமியார் அதிர்ச்சி அடைய- “அவன் கொல்ல வந்தது உங்களை அல்ல...என்னைத்தான்...” என்று ஜெய்யின் தந்தை முன்னால் வருகிறார். ஊர்-உலகத்தில் மகனுக்கு தந்தை சொத்து சேர்த்து வைப்பார். ஆனால், எனக்கு எங்க அப்பா ஒன்றுமே சேர்த்து வைக்கலை” என்று ஆதங்கப்படுகிறார், ஜெய்.

அவரிடம், “உனக்கு காசியில் பரம்பரை சொத்து இருக்கிறது. அதை விற்று பணத்தை எடுத்துக் கொள்” என்கிறார்கள். பரம்பரை சொத்தை கண்டுபிடித்து விற்பதற்காக ஜெய் காசி போகிறார். அங்கே ‘கைடு’ ஆக இருக்கும் ஜீவாவை சந்திக்கிறார். அவர் குத்தகைக்கு எடுத்து நடத்தும் மேன்சனில் ஜெய் தங்குகிறார். அந்த மேன்சன்தான் தனது பரம்பரை சொத்து என்பதை ஜெய் கண்டுபிடிக்கிறார். ஜீவாவிடம் இருந்து அவர் மேன்சனை மீட்டாரா, இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் சுந்தர் சி.

வயதான பாட்டி, திருமண வயதில் ஒரு தங்கை ஆகிய இருவருக்காகவும் உழைக்கும் இளைஞராக ஜீவா. கேத்தரின் தெரசாவுடன் காதல், டூயட், எல்லா வசதிகளும் தனது மேன்சனில் இருக்கிறது என்று பொய் சொல்லி பயணிகளை தங்க வைக்கும் சாமர்த்தியம், ஜெய்யை “ஜீ...ஜீ...” என்று மரியாதையுடன் அழைக்கும் பண்பு, வில்ல கும்பலுடன் சண்டை என ஒரு கதாநாயகனுக்குரிய வேலைகளை பிசிறு இல்லாமல் செய்திருக்கிறார், ஜீவா. இவர், கேத்தரின் தெரசா அழகில் மயங்கி வழிவதும், அதை புரிந்து கொண்டு கேத்தரின், ஜீவா பின்னால் சுற்றுவதும், கிளுகிளுப்பான காட்சிகள்.

ஜெய், கன்னம் உப்பிப்போய் புஷ்டியாக தெரிகிறார். நடிப்பதற்கு அதிக சந்தர்ப்பம் தரும் கதாபாத்திரம். அவருக்கு ஜோடி, தாசில்தார் நிக்கி கல்ராணி. காதல்-பாடல் காட்சிகளில் ஜெய்யுடன் மிக நெருக்கமாக ஒட்டிக் கொள்கிறார், நிக்கி. ஒப்பனையில் கவனம் செலுத்த வேண்டியது, அவசியம். சிவா ஆஜரான பின், கதையில் திருப்பம். அவருடைய வழக்கமான வசன விளையாட்டும், நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் ராதாரவியை உருட்டியும், புரட்டியும் எடுத்து இருக்கிறார்கள். அவருடைய உதவியாளர் ஜார்ஜுக்கு அமாவாசை அன்று வெறி பிடிப்பதும், பக்கத்தில் படுத்திருக்கும் ராதாரவியை அவர் பந்தாடுவதும், ஆரவாரமான காமெடி. வி.டி.வி.கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி என படம் முழுக்க நகைச்சுவை பட்டாளம். காட்சிகளும், வசன வரிகளும் சேர்ந்து தியேட்டரை அதிர வைக்கின்றன.

“பயப்படாத பொம்பளைக்கு உருப்படாத புருஷன் கிடைப்பான்...நீ பயப்பட மாட்டே...நான் உருப்பட மாட்டேன்,” “டாப்புல எய்ம் பண்ணி தோற்றவனும் இருக்கான்...பாட்டத்துல எய்ம் பண்ணி ஜெயிச்சவனும் இருக்கான்” போன்ற பத்ரியின் வசன வரிகள் உதாரணம்.

மெலடி பாடல், குத்துப்பாடல் என ரகம் ரகமாக டியூன் போட்டு இருக்கிறார், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. ஆட்டமும், பாட்டும் நகைச்சுவை திருவிழா.

படத்தின் முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்தையும் கலகலப்பாக படமாக்கியிருக்கிறார், டைரக்டர் சுந்தர் சி. நகைச்சுவை பட்டாளம் முழுவதையும் கொண்டு வந்து இறக்கியிருக்கிறார். நடிகர்கள் அனைவரும் இறங்கி அடித்து இருக்கிறார்கள். படத்தின் நீளம்தான் மிக அதிகம்.

Next Story