ஜானி


ஜானி
x
தினத்தந்தி 17 Dec 2018 5:17 PM GMT (Updated: 17 Dec 2018 5:17 PM GMT)

ஒரு கொலையை மறைக்க அடுத்தடுத்து கொலைகளை செய்யும் நாயகன். படம் "ஜானி" கதாநாயகன் பிரஷாந்த், கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி, டைரக்‌ஷன் வெற்றி செல்வன், சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  பிரஷாந்த், பிரபு, ஆனந்தராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் ஆகிய ஐந்து பேரும் நண்பர்கள். கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து, நல்ல நோட்டுகளை வாங்குவது, போதை பொருள் வியாபாரம் என சட்டத்துக்கு விரோதமான தொழில்களை செய்து வருகிறார்கள். 5 பேரும் ஒரு சூதாட்ட கிளப்பில் சந்தித்து சட்ட விரோதமான தொழில்களுக்கு திட்டம் தீட்டுகிறார்கள்.

போலீசிடம் சிக்கிய ஒரு போதை பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக பிரபுவுக்கு தகவல் வருகிறது. ஐந்து பேரும் சேர்ந்து பணம் போட்டு, அந்த போதை பொருளை வாங்க முடிவு செய்கிறார்கள். இதற்காக ஆத்மா பேட்ரிக்கிடம் பணத்தை கொடுத்து அனுப்புகிறார்கள்.

இந்த நிலையில், பிரஷாந்தின் காதலி சஞ்சிதா ஷெட்டியை அசுதோஷ் ராணா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். “என் அப்பா வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால், என்னை அசுதோஷ் ராணா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவரிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்” என்று பிரஷாந்திடம் சஞ்சிதா ஷெட்டி கெஞ்சுகிறார். தன் கைக்கு பணம் வந்ததும் இருவரும் கனடாவுக்கு பறந்து விடலாம் என்று பிரஷாந்த் கூறுகிறார்.

கூட்டாளிகளின் பணத்தை ரெயிலில் எடுத்து செல்லும் ஆத்மா பேட்ரிக்கை அடித்து கொன்று விட்டு, பணத்தை பிரஷாந்த் கைப்பற்றுகிறார். அவர் மீது பிரபுவுக்கு சந்தேகம் வருகிறது. உடனே பிரபுவை பிரஷாந்த் சுட்டு கொல்கிறார். ஒரு கொலையை மறைக்க அடுத்தடுத்து கொலைகளை செய்கிறார், பிரஷாந்த். அவர் அந்த கொலை குற்றங்களில் இருந்து தப்பித்தாரா, இல்லையா? அவருடைய காதலி சஞ்சிதா ஷெட்டி என்ன ஆகிறார்? இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்களா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு மீதி படத்தில் விடை இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘ஜானி கட்டார்’ என்ற இந்தி படத்தை தழுவிய கதை, இது. காதல் மற்றும் அதிரடி நாயகனாக இருந்து வந்த பிரஷாந்த் முதல் முறையாக ஒரு மாறுபட்ட நாயகனாக நடித்து இருக்கிறார். கோடிக்கணக்கான பணத்தை அபேஸ் செய்து, காதலியுடன் கனடாவில் குடியேற முடிவு செய்யும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில், திறமை காட்டியிருக்கிறார்.

தனது திட்டத்துக்கு எதிரானவர்களை வரிசையாக தீர்த்துக் கட்டும் காட்சிகளில், பிரஷாந்த் மிரட்டியிருக்கிறார். அந்த ரெயில் சண்டை காட்சியில் படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார்.

சஞ்சிதா ஷெட்டி அழகும், கவர்ச்சியும் கலந்த நாயகி. படத்தில் இவருக்கு அதிக வேலை இல்லை. பிரபு தேர்ந்த நடிகர் என்பதை அவர் தொடர்பான காட்சிகளில் கணிக்க முடிகிறது. ஆனந்தராஜின் ‘காமெடி வில்லன்’ நடிப்பு, ரசிக்க வைக்கிறது. அவர் தொடர்பான வசன காட்சிகள், தியேட்டரை கலகலப்பாக வைத்து இருக்கிறது. சாயாஜி ஷின்டே வருகிற காட்சிகள், அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டுகின்றன.

கதைக்கு தேவையில்லாத சில காட்சிகளை நீக்கியிருக்கலாம். பணத்துக்காக கூட்டாளிகளையே போட்டுத்தள்ளும் நண்பன் என்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து இருக்கிறார், டைரக்டர் பி.வெற்றி செல்வன். ஆரம்பம் முதல் இறுதி வரை எதிர்பாராத திருப்பங்களுடன் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார், டைரக்டர். அவருக்கு பக்கபலமாக ஒளிப்பதிவும், பின்னணி இசையும் அமைந்துள்ளன.

Next Story