சீதக்காதி


சீதக்காதி
x
தினத்தந்தி 20 Dec 2018 4:41 PM GMT (Updated: 20 Dec 2018 4:41 PM GMT)

ஒரு பழம்பெரும் நாடக நடிகர் பற்றிய கதை. “செத்தும் கொடுத்தார் சீதக்காதி” என்ற பொன்மொழிக்கேற்ப படத்தின் ‘டைட்டிலுடன்’ கச்சிதமாக பொருந்துகிறது கதை.

இதுவரை கதாநாயகனாக, கதையின் நாயகனாக நடித்து வந்த விஜய் சேதுபதி, இந்த படத்தில் ‘ஐயா ஆதிமூலம்’ என்ற முதுபெரும் நாடக நடிகராக வருகிறார்.

அவர் நடிக்கும் நாடகம் அரங்கு நிறைந்த காட்சியாக நடைபெறுவது போல் படம் ஆரம்பிக்கிறது. வருடங்கள் கடந்து வயதான பின், 2013-ம் ஆண்டில் அவர் நடிக்கும் ‘அவுரங்கசீப்’ நாடகத்தை பார்க்க அரங்கில் மிக சிலரே அமர்ந்திருக்கிறார்கள். அரங்கம் காலியாக கிடக்கிறது. ஐயா ஆதிமூலத்துக்கு லட்சுமி (அர்ச்சனா) என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகள் வழி பேரனுக்கு மூளையில் கட்டி இருக்கிறது. அதை ‘ஆபரேஷன்’ செய்து அகற்றுவதற்கு சில லட்சங்கள் தேவைப்படுகிறது.

பேரன் மீது அதிக பாசம் கொண்ட அந்த தாத்தாவுக்கு பணத்துக்கு என்ன செய்வது? என்று கவலை. நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அவர் இறந்து விடுகிறார். அவருடைய நாடக குழுவினர் தொடர்ந்து நாடகம் நடத்துகிறார்கள். ஐயா ஆதிமூலம் இறந்து விட்டாலும், அவருடைய ஆவி அந்த நாடக குழுவினருடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக மானேஜர் மவுலி நம்புகிறார். அதனால் ஏற்படும் பின்விளைவுகளே கதை.

ஐயா ஆதிமூலமாக விஜய் சேதுபதி. அவருடைய வயதான தோற்றமும், நடிப்பும் ஆச்சரியப்படுத்துகின்றன. ஒரே காட்சியில், இரண்டே வரி வசனத்தில், பேரன் மீது அவர் கொண்ட பாசத்தை வெளிப்படுத்தும் காட்சி, நெகிழவைக்கிறது. அவரது மனைவியாக அர்ச்சனா. சிறந்த நடிப்புக்கான தேசிய விருது பெற்ற அவரை, இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.

மவுலி, டைரக்டர் மகேந்திரன், பகவதி பெருமாள், ராஜ்குமார், கருணாகரன், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் என படத்தில் நட்சத்திர கூட்டம் அதிகம். இவர்கள் அனைவரும் சிறப்பு தோற்றங்களாக வருகிறார்கள். கோவிந்த் வஸந்தாவின் பின்னணி இசையும், சரஸ்காந்தின் ஒளிப்பதிவும் கதையோட்டத்துக்கு பக்கபலமாக உள்ளன.

பாலாஜி தரணிதரன் டைரக்டு செய்து இருக்கிறார். ஒரு வயதான நாடக நடிகரின் கதையை உருக்கமாகவும், யதார்த்தமாகவும், நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார். ஐயா ஆதிமூலம் தொடர்பான ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. அவருடைய மறைவுக்குப்பின், கதை நகைச்சுவைக்கு மாறியிருக்கிறது. குறிப்பாக, ராஜ்குமார்-பகவதி பெருமாள் தொடர்பான படப்பிடிப்பு காட்சியும், தனபால் கதாபாத்திரத்தில் வரும் சுனில் தொடர்பான படப்பிடிப்பு காட்சிகளும், கலகலப்பு. வசன வரிகள், சில இடங்களில் கைதட்ட வைக்கின்றன. ஐயா ஆதிமூலத்தின் ஆவி தொடர்பான விவகாரம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பஞ்சாயத்துக்கு வரும் காட்சி, ஆரவாரமான நகைச்சுவை. ‘கிளைமாக்ஸ்,’ மிக சரியான முடிவு.

Next Story