மான்ஸ்டர்


மான்ஸ்டர்
x
தினத்தந்தி 26 May 2019 5:40 PM GMT (Updated: 26 May 2019 5:40 PM GMT)

ஈ, எறும்பை கூட கொல்ல விரும்பாத இளைஞனும், ஒரு எலியும். படம் "மான்ஸ்டர்" கதாநாயகன் எஸ்.ஜே.சூர்யா, கதாநாயகி ப்ரியா பவானி சங்கர், டைரக்‌ஷன் நெல்சன் வெங்கடேசன்,

கதையின் கரு:  எஸ்.ஜே.சூர்யா, சின்ன வயதில் இருந்தே வள்ளலாரின் பக்தர். “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் வாசகங்களுக்கு ஏற்ப, ஒரு ஈ-எறும்புக்கு கூட கெடுதல் நினைக்காதவர். மின்சார வாரியத்தில் பணிபுரிகிறார்.

ரூ.50 லட்சம் கொடுத்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், சொந்தமாக வீடு வாங்குகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் மணமகளை தேடுகிறார்கள். ப்ரியா பவானி சங்கரை மணமகளாக தேர்வு செய்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவின் இரக்க சுபாவத்தையும், நல்ல குணத்தையும் பார்த்து அவருடன் காதல்வசப்படுகிறார். அவரை எஸ்.ஜே.சூர்யாவும் விரும்புகிறார்.

சாப்பிடுகிற ரஸ்குக்குள் வைரக்கற்களை வைத்து கடத்தல் தொழில் செய்கிறான், ஒரு ஆசாமி. அந்த ரஸ்குகள் எஸ்.ஜே.சூர்யா வீட்டில் மாட்டிக் கொள்கின்றன. அதை ஒரு எலி விழுங்கி விடுகிறது. அந்த எலியை பிடிக்க கடத்தல் ஆசாமி, எஸ்.ஜே.சூர்யா வீட்டுக்கு வர- எலி தொல்லையை தாங்க முடியாமல் அதை பிடிக்க முயற்சிக்கிறார், எஸ்.ஜே.சூர்யா. எலி யார் கையில் சிக்கியது? வைரக்கல் என்ன ஆகிறது? என்பது பின்பகுதி கதை.

‘அஞ்சனம் அழகிய பிள்ளை’ என்ற தூய தமிழ் பெயரை கொண்டவராக-வள்ளலாரின் பக்தராக எஸ்.ஜே.சூர்யா. கதாபாத்திரத்துடன் கச்சிதமாக பொருந்துகிறார். மணப்பெண் பார்க்கப்போன இடத்தில், அந்த பெண்ணை பார்க்க முடியாத ஏமாற்றம், அதே பெண்ணின் குரலை செல்போனில் கேட்டு பரவசம் அடைவது, மெல்ல மெல்ல அவர் மீது காதல்வசப்படுவது ஆகிய காட்சிகளில், எஸ்.ஜே.சூர்யாவின் முகமெல்லாம் காதல் உணர்வுகள்.

தொல்லை தரும் எலியை பிடிக்க முயற்சிப்பது, எலி கொல்லி மருந்தின் நெடியை சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவது, அதன் குட்டிகளை பார்த்து இரக்கப்படுவது, எலி குட்டிகளை அதன் தாயிடமே கொண்டு போய் சேர்ப்பது. என எலி தொடர்பான காட்சிகளில், எஸ்.ஜே.சூர்யா நெகிழவைக்கிறார். ப்ரியா பவானி சங்கர் அழகான நாயகி. உணர்ச்சிகளை எளிதாக முகத்துக்கு கொண்டு வருகிறார்.

வில்லன் அனில்குமாருக்கு அதிக வேலை இல்லை. இவரை இடையிடையே காட்டி, என்னவோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம். கருணாகரன், படம் முழுக்க வருகிறார். காமெடி வசனம் பேசி, சிரிக்க வைக்கிறார்.

கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்து இருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை, ஆரம்ப காட்சிகளில் திகிலூட்டுகிறது. சில இடங்களில் வருடிக் கொடுக்கிறது. நெல்சன் வெங்கடேசன் டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் கரு, ‘நான் ஈ’ படத்தை நினைவூட்டுகிறது.. இடைவேளைக்குப்பின், திரைக்கதையில் வேக குறைவு. இருப்பினும், எலியின் சாகசங்கள் வியக்க வைக்கின்றன. குழந்தைகளுக்கு கோடை கால கொண்டாட்டமாக இருக்கும்.

Next Story