என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்


என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
x
தினத்தந்தி 4 Jun 2019 12:23 AM GMT (Updated: 4 Jun 2019 12:23 AM GMT)

கதாநாயகன் சூர்யா, கதாநாயகி சாய்பல்லவி, டைரக்‌ஷன் செல்வராகவன். அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு நன்மை செய்ய விரும்பும் சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள். செல்வராகவன் இயக்கியுள்ள படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் சூர்யாவுக்கு சமூக நலப்பணிகளில் ஆர்வம். இளைஞர்களை ஒன்று சேர்த்து இயற்கை விவசாயம் செய்து பொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்கிறார். இதில் பாதிக்கப்படும் பூச்சி மருந்து கடைக்காரர்களும், கந்து வட்டி கும்பலும் விவசாய நிலத்தையும் விளைபொருட்களையும் அழிக்கின்றனர்.

இதனால் சூர்யா, ‘எம்.எல்.ஏ.’ இளவரசு உதவியை நாடி போகிறார். அவரும் உதவி செய்து அதற்கு பதிலாக சூர்யாவை தனது கட்சியில் இணைத்து எடுபிடியாக வைத்துக் கொள்கிறார். சூர்யா படிப்படியாக அரசியல் கற்று கட்சியில் பதவி கேட்க- இளவரசு மறுக்கிறார். அப்போது கார்பரேட் மூளையுடன் கட்சி தலைவருக்கு ஆலோசனைகள் வழங்கி அரசியலை ஆட்டிப்படைக்கும் ரகுல்பிரீத் சிங்கை சந்திக்கிறார். தனக்கு எம்.எல்.ஏ ‘சீட்’ கிடைக்க உதவுமாறு அவரிடம் கேட்கிறார்.

இன்னொரு புறம் சூர்யாவுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு, கட்சி தலைவருக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. முதல்-அமைச்சரின் பகையையும் சம்பாதிக்கிறார். அவர் உயிருக்கும் குறி வைக்கிறார்கள். அதில் இருந்து சூர்யா தப்பினாரா? அரசியலில் சாதித்தாரா? என்பது மீதி கதை.

செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்பார்ப்போடு வந்துள்ள படம். கட்சி தொண்டர்களை தலைவர்கள் இழிவுபடுத்தும் கொடுமை, ஊழல் அரசியல்வாதிகளின் சதுரங்க விளையாட்டு, சேவை செய்ய துடிக்கும் இளைஞர்கள் சந்திக்கும் தடைகள் என்று அரசியல் படத்துக்கான கதைக்களத்தை வலுவாகவே அமைத்துள்ளார். அதில் சூர்யாவின் நடிப்பு, கூடுதல் அம்சம். பொதுமக்களுக்கு உதவும் சேவகராக, அரசியல்வாதி வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்யும் வேலைக்காரராக, கார்பரேட் அளவுக்கு யோசிக்கும் புத்திசாலியாக, நம்பிக்கை தகர்ந்து தவிக்கும் இளைஞனாக- உணர்வுகளோடு வாழ்ந்து மொத்த கதையையும் சுமக்கிறார். அடிதடியிலும் பொறி கிளப்புகிறார்.

கிளைமாக்சில் பேசும் ஆவேச வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன. மனைவியாக வரும் சாய்பல்லவி முதல் பாதியில் அமைதியான நடிப்பால் ‘ஸ்கோர்’ பண்ணுகிறார். கணவரை சந்தேகிக்கும் காட்சிகள் கதைக்கு ஒட்டாமல் நிற்கிறது. ரகுல்பிரீத் சிங்கின் கம்பீரமும், அரசியல்வாதிகளை மிரட்டும் தொனியும் கவர்கின்றன. அதன்பிறகு காதல், நடனம் என்று அந்த கதாபாத்திரம் வலுவிழக்கிறது.

இளவரசு, பொன்வண்ணன், தேவராஜ் ஆகியோர் வில்லத்தனமான அரசியல்வாதிகளாக மிரட்டுகின்றனர். தாய், தந்தையாக வரும் நிழல்கள் ரவி, உமா பத்மநாபன், சூர்யாவுக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கும் பாலாசிங் கதாபாத்திரங்களும், நிறைவு. ‘தலைவாசல்’ விஜய், வேல ராமமூர்த்தி இருவரும் வந்து போகிறார்கள்.

அடுத்தது என்ன? என்ற விறுவிறுப்பான எதிர்பார்ப்புடன் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார், டைரக்டர் செல்வராகவன். அரசியல் உலக ஆபத்துகளை சித்தரித்ததிலும், தனித்து தெரிகிறார். வலுவான கதாபாத்திரங்களைப்போல் திரைக்கதையையும் கட்டமைத்து இருந்தால், படம் பேசப்பட்டு இருக்கும். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு, காட்சிகளை மிரட்டலாக பதிவு செய்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, கதைக்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது.

Next Story