கொலை செய்யப்பட்ட 2 பேரின் ஆவிகள் கதாநாயகனுக்குள் புகுந்து பழிதீர்க்க முயற்சி செய்யும் பேய்கள்: படம் தேவி-2 சினிமா விமர்சனம்


கொலை செய்யப்பட்ட 2 பேரின் ஆவிகள் கதாநாயகனுக்குள் புகுந்து பழிதீர்க்க முயற்சி செய்யும் பேய்கள்: படம் தேவி-2 சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 6 July 2019 2:38 PM GMT (Updated: 6 July 2019 2:38 PM GMT)

கிராமத்து பெண்ணான தமன்னாவை திருமணம் செய்துகொண்டு மும்பைக்கு அழைத்து வருவார், பிரபுதேவா. தமன்னாவின் கணவரான பிரபுதேவாவை பேய் பிடித்துக் கொள்கிறது. ஒரு பேய் அல்ல; இரண்டு பேய்கள். படம் "தேவி-2" சினிமா விமர்சனம்.

தேவி-2

3 வருடங்களுக்கு முன்பு பிரபுதேவா-தமன்னா நடித்து, விஜய் டைரக்‌ஷனில் வெளிவந்த படம், ‘தேவி.’ கிராமத்து பெண்ணான தமன்னாவை திருமணம் செய்துகொண்டு மும்பைக்கு அழைத்து வருவார், பிரபுதேவா. தமன்னாவை பேய் பிடித்துக்கொள்ளும். அந்த பேயிடம் இருந்து தமன்னாவை பிரபுதேவா காப்பாற்றுவது போல் ‘தேவி’ படத்தின் கதை அமைந்திருந்தது.

அந்த இடத்தில் இருந்து ‘தேவி-2’ படத்தின் கதை தொடங்குகிறது. இதில், தமன்னாவின் கணவரான பிரபுதேவாவை பேய் பிடித்துக் கொள்கிறது. ஒரு பேய் அல்ல; இரண்டு பேய்கள். அதில் ஒரு பேயின் பெயர், அலெக்ஸ் பிரிட்டோ. இன்னொரு பேயின் பெயர், ரங்கா ரெட்டி. (ஆந்திரா பேய்.) இருவரையும் காதலித்த ஒரே காரணத்துக்காக அலெக்ஸ் பிரிட்டோவையும், ரங்கா ரெட்டியையும் வில்லன் அஜ்மல் கொலை செய்து விடுகிறார்.

கொலை செய்யப்பட்ட அந்த 2 பேரின் ஆவிகளும் பிரபுதேவாவுக்குள் புகுந்து கொண்டு அவர் மூலம் பழிதீர்க்க முயற்சிக்கின்றன. கணவர் பிரபுதேவா உடம்புக்குள் 2 பேய்கள் இருப்பதை உணர்ந்து, அந்த பேய்களை விரட்ட முயற்சிக்கிறார், தமன்னா. இதற்காக அவர் கோவை சரளாவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞரான கோவை சரளா ‘காமெடி’யாக பேசி, பேய்களுக்கு முடிவு கட்ட முயற்சிக்கிறார்.

அப்போது, இரண்டு பேய்களும் தமன்னா, கோவை சரளா ஆகிய இருவரையும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வைக்கின்றன. அது என்ன ஒப்பந்தம், அதற்கு பிறகாவது பிரபுதேவா உடம்பை விட்டு பேய்கள் வெளியேறுகின்றனவா, இல்லையா? என்பது மீதி கதை.

பிரபுதேவா நடிப்பதற்கு நிறைய சந்தர்ப்பம் உள்ள கதாபாத்திரம். கிருஷ்ணா என்ற இளம் கணவர், அலெக்ஸ் பிரிட்டோ என்ற நந்திதாவின் காதலர், ரங்கா ரெட்டி என்ற டிம்பிள் ஹயாதியின் முரட்டு காதலர் ஆகிய மூன்று முகம் காட்ட வாய்ப்பு. பிரபுதேவாவின் இத்தனை கால நடிப்பு அனுபவமும், இந்த படத்தில் பேசியிருக்கிறது.

கிருஷ்ணா, அலெக்ஸ் பிரிட்டோ, ரங்கா ரெட்டி ஆகிய மூன்று பேருக்கும் மூன்று விதமான முகம் காட்டுவதுடன், வசன உச்சரிப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். படுக்கை அறை காட்சியில், தமன்னாவுடன் நெருக்கம், ரசிகர்களுக்கு போனஸ். கணவர் பிரபுதேவா ரவுடிகளால் தாக்கப்படும் காட்சிகளில், “அண்ணா, அவரை அடிக்கதீங்கண்ணா” என்று கண்கலங்கி, படம் பார்ப்பவர்களையும் கலங்க வைக்கிறார். நந்திதா, டிம்பிள் இருவரையும் விரட்டி விரட்டி காதலிக்கும் பிரபுதேவாவுக்கு தமன்னா வீட்டிலேயே கவர்ச்சி விருந்து கொடுக்கும் பாடல் காட்சியில், தமன்னாவின் ஆட்டமும், குலுக்கலும், அடேங்கப்பா!

நந்திதா ஸ்வேதா, டிம்பிள் ஹயாதி இருவரும் படத்தின் நட்சத்திர அந்தஸ்தை கூட்டுகிறார்கள். பேய் படம் என்றாலே கோவை சரளாவுக்கு ஒரு வேடம் கொடுத்து விடுவார்கள் போல... ஆர்.ஜே.பாலாஜி, அஜ்மல் இருவரும் தலையை காட்டிவிட்டு போகிறார்கள்.

சிரிக்க வைக்கும் பேய் படம் என்பதை உணர்ந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார், அயனன்கா போஸ். சாம் சி.எஸ்.சின் மென்மையான பின்னணி இசை, காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்து இருக்கிறது. இரண்டு வரிகளில் எழுதிவிடக் கூடிய கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இருக்கிறார், டைரக்டர் விஜய். பேய்களின் கதை சரி. அவை ஒப்பந்தம் போடுவதும், அவைகளுடன் தமன்னாவும், கோவை சரளாவும் ஒப்பந்தம் போடுவதும், மிகையான (கற்பனை) காட்சிகள். ‘கிளைமாக்ஸ்’சில் சோனுவை காட்டி, அவரை கண்கலங்க வைத்து, முதல் பாகத்துக்கும், இரண்டாம் பாகத்துக்கும் புத்திசாலித்தனமாக முடிச்சு போட்டு இருக்கிறார், டைரக்டர் விஜய்.

Next Story