போலீசுக்கும், வங்கி கொள்ளையர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை படம்: சுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்


போலீசுக்கும், வங்கி கொள்ளையர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை படம்: சுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்
x
தினத்தந்தி 19 July 2019 4:17 PM GMT (Updated: 19 July 2019 4:17 PM GMT)

‘டைட்டிலே’ படத்தின் கதையை சொல்லி விடுகிறது. போலீசுக்கும், வங்கி கொள்ளையர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை படம்.

மிகப்பெரிய மாலில் உள்ள ஒரு வங்கிக்குள் 4 கொள்ளையர்கள் நுழைந்து கொள்ளையடித்த பணத்துடன் தப்பி ஓடுகிறார்கள். அவர்களை போலீஸ் துரத்துகிறது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறார்கள்.

அதில், ஒரு கொள்ளையன் குண்டு பாய்ந்து இறந்துபோகிறான். மற்ற மூன்று பேரும் தப்பி ஓடுகிறார்கள். குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அவர்களை போலீஸ் படை துப்பாக்கியால் சுட்டபடி, துரத்திக் கொண்டே வருகிறது. அந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவர், விக்ராந்த். அவருக்கு வாய் பேச முடியாத ஒரு மகள் இருக்கிறாள். இன்னொரு கொள்ளையர், டைரக்டர் சுசீந்திரன்.

போலீசுக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை முடிவுக்கு வரும் வேளையில், கதையில் ஒரு பெரிய திருப்பம். யூகிக்க முடியாத அந்த திருப்பம், படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வருகிறது.

போலீஸ் அதிகாரி வேடத்துக்கு மிஷ்கின், நூற்றுக்கு நூறு பொருந்துகிறார். கண்டிப்பான அதிகாரி என்றாலும், அவருக்குள் இரக்கமும், மனிதநேயமும் இருப்பதை ஒரு குழந்தை மூலம் வெளிப் படுத்தியிருப்பது, நெகிழ்ச்சியான காட்சி. மிஷ்கின் கனத்த உடம்புடன் படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். கடைசியில் எல்லாமே அவர் ஏற்பாடு என்று தெரியவரும்போது, இன்ப அதிர்ச்சி.

விக்ராந்த், கொள்ளை அடிக்கும்போதும், பணத்துடன் ஓடி வரும்போதும், நிறைய பதற்றம் காட்டியிருக்கிறார். அவரிடம் குழந்தை சைகை மூலம் பேசுவதும், “அப்பா சீக்கிரம் வந்து விடுவேன்” என்று இவர் குழந்தையை சமாதானப்படுத்துவதும், உருக்கமான காட்சி. கடைசி காட்சியில் படத்தில் வரும் திருப்பம், இவருடைய கதாநாயகன் அந்தஸ்தை காப்பாற்றுகிறது.

டைரக்டர் சுசீந்திரனுக்கு அதிக வேலை இல்லை. போலீசிடம் பிடிபடாமல் ஓடுவதும், துப்பாக்கியால் சுடுவதும்தான் இவர் வேலை. நல்ல வேளை, படத்தில் இவருக்கு ஒரு ‘பிளாஷ்பேக்’ இல்லை. அதுல்யா ரவி டி.வி. தொகுப்பாளினியாக வருகிறார். கதாநாயகியாக இல்லை என்றாலும், நல்ல கதாபாத்திரம். பேபி மானஸ்வி, கதைக்கு பொருத்தமான தேர்வு.

படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளை விட, ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங்குக்கு அதிக வேலை. படம் முழுக்க இவரும், கேமராவும் ஓடி, ஓடி உழைத்து இருக்கின்றன. அதுவும் குறிப்பாக மொட்டை மாடிகளில் கொள்ளையர்களும், போலீசும் தாவி ஓடுவதை விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார். பின்னணி இசையில், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பெஜாய் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இதுபோன்ற திருடன்-போலீஸ் கதைகள் நிறைய வந்திருந்தாலும், கதை சொன்ன விதத்தில் வித்தியாசப்படுத்தி இருக்கிறார், டைரக்டர் ராம்பிரகாஷ் ராயப்பா. குறிப்பாக அந்த ‘கிளைமாக்ஸ்’, யாரும் எதிர்பாராதது. படத்தின் முதல் பாதி, எந்த கவன ஈர்ப்பும் இல்லாமல் கடந்து போகிறது. இரண்டாவது பாதியில் டைரக்டரின் திறமை வெளிப்படுகிறது.

Next Story