கடத்தப்பட்ட மனைவியை கடல் கடந்து காப்பாற்றும் கதாநாயகன். படம் "சிந்துபாத்" - விமர்சனம்


கடத்தப்பட்ட மனைவியை கடல் கடந்து காப்பாற்றும் கதாநாயகன். படம் சிந்துபாத் - விமர்சனம்
x
தினத்தந்தி 19 July 2019 5:29 PM GMT (Updated: 19 July 2019 5:29 PM GMT)

விஜய் சேதுபதியும், அவருடைய மகன் சூர்யாவும் இணைந்து நடித்த படம் என்ற சிறப்புடன் வந்திருக்கும் படம். சிந்துபாத் சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  கதைப்படி, இருவரும் திருடர்கள். சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள். அஞ்சலியை பெண் பார்க்க போகிறார், விஜய் சேதுபதி. இவர் திருடன் என்பது தெரிந்து, பெண் கொடுக்க மறுக்கிறார்கள். அடுத்தடுத்த சந்திப்புகளில் விஜய் சேதுபதியும், அஞ்சலியும் காதல்வசப்படுகிறார்கள்.

அஞ்சலியின் மாமா வாங்கிய கடனுக்காக அவர் மலேசியாவில் வேலைக்கு செல்கிறார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு விஜய் சேதுபதி தாலி கட்டி விடுகிறார். மலேசியாவில் அஞ்சலிக்கு மிகப்பெரிய அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அங்கே கடுமையான வேலைப்பளுவுடன், பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் நடக்கின்றன. அங்கிருந்து அஞ்சலி தப்பிக்க முயற்சிக்கிறார்.

அவரை கண்டுபிடித்து இழுத்து வந்து விடுகிறார்கள். அதன்பிறகு அஞ்சலி மலேசியாவில் இருந்து வேறு ஒரு நாட்டுக்கு கடத்தப்படுகிறார். அங்கு அழகான பெண்களின் தோலை உரித்து விற்கும் ஆபத்தான கும்பலிடம் அஞ்சலி சிக்குகிறார்.

இதுபற்றி அவர் கணவர் விஜய் சேதுபதிக்கு செல்போன் மூலம் தெரிவிக்கிறார். மனைவி அஞ்சலியை மீட்க விஜய் சேதுபதி மலேசியா செல்கிறார். அவர் அஞ்சலியை மீட்டாரா, இல்லையா? என்பதே ‘கிளைமாக்ஸ்.’

விஜய் சேதுபதி நடித்துள்ள இன்னொரு வித்தியாசமான கதை. காது கேட்காத அவரும், சிஷ்யன் சூர்யாவும் திருட்டையே தொழிலாக வைத்திருப்பது போல் கலகலப்பாக ஆரம்பிக்கிறது, படம். அஞ்சலி மீதான காதலில் அவரை விஜய் சேதுபதி பின்தொடர்வது, ஒரு கட்டத்தில் அவருடைய காதலை அஞ்சலி ஏற்றுக் கொள்வது என வழக்கமான காதல் படம் போல் காட்சிகள் நகர்கின்றன. விஜய் சேதுபதியின் வெளிநாட்டு சண்டை காட்சிகள், பதற்றம் ஏற்படுத்துகின்றன.

அஞ்சலிக்கு வாயாடி கதாபாத்திரம். அவருடைய மலேசிய பயணத்துக்குப்பின், கதை சூடு பிடிக்கிறது. அஞ்சலியை காப்பாற்ற விஜய் சேதுபதி மலேசியாவுக்கு பறந்ததும் அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. கண்ணியமான வேலை என்று நம்பி வந்த பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும், சிவப்பு தோல் உள்ள பெண்கள் சித்ரவதை செய்யப்படுவதும், கொடூரமான காட்சிகள்.

படத்தின் சிறப்பு அம்சம், விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு. வெளிநாட்டு காட்சிகள் வியக்க வைக்கின்றன. இசை, யுவன் சங்கர் ராஜாவா? என்று சந்தேகப்பட வைக்கிறது. பின்னணி இசையில், வாத்தியங்களின் சத்தம் அதிகம்.

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் எப்படியெல்லாம் ஆபத்துகளை சந்திக்கிறார்கள்? என்ற ஒரு வரி கதையை வைத்துக் கொண்டு, விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து இருக்கிறார், டைரக்டர் அருண்குமார். ஒரே ஆள், பெரிய பட்டாளம் போன்ற வில்ல கும்பலை எதிர்த்து சண்டை போட்டு ஜெயிப்பது, நம்ப முடியாத காட்சிகள். படத்தின் உச்சக்கட்ட காட்சி, உறைய வைக்கும் திகில்.


Next Story