ஒரு விளையாட்டு வினை ஆகிறது: படம் "போதை ஏறி புத்தி மாறி" விமர்சனம்


ஒரு விளையாட்டு வினை ஆகிறது:  படம் போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்
x
தினத்தந்தி 20 July 2019 5:07 PM GMT (Updated: 20 July 2019 5:07 PM GMT)

போதை பழக்கத்தில் இருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை சொல்வது போல் படம் தொடங்குகிறது. போதை ஏறி புத்தி மாறி சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  போதை ஏறி புத்தி மாறி படம் தாடி வளர்த்த கதாநாயகன் தீரஜும் இருக்கிறார். அவர் தனது அனுபவங்களை சொல்வது போல் கதை, ‘பிளாஷ் பேக்’கில் பின்நோக்கி போகிறது. தீரஜுக்கும், துஷாராவுக்கும் பெற்றோர்கள் திருமணம் பேசி முடிக்கிறார்கள். நிச்சயதார்த்தம் நடக்கிறது.

மறுநாள் விடிந்தால் திருமணம் என்ற நிலையில், நண்பர்கள் வைக்கும் ‘பார்ட்டி’யில் தீரஜ் கலந்து கொள்கிறார். அப்போது, சிவப்பு நிற பவுடர் போன்ற போதை மருந்து பற்றிய பேச்சு வருகிறது. ‘பார்ட்டி’யில் கலந்து கொள்கிற ஒரு நண்பர் அந்த போதை மருந்தை எடுத்து காட்ட-தீரஜ் விளையாட்டாக-துஷாராவை மிரட்டுவதற்காக அந்த போதை மருந்தை மூக்கு வழியாக இழுக்கிறார். போதையின் உச்சத்துக்கே போய் விடுகிறார்.

அவருடைய கற்பனையில், நண்பர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள். போதை தெளிந்து தீரஜ் அங்கிருந்து தப்புவதற்கு முயற்சிக்கிறார். முடியவில்லை. அப்போது, அழைப்பு மணி அடிக்கிறது. போலீஸ் என்று பயந்து, சினேகிதியை கத்தியால் குத்தி விடுகிறார். அவரை போலீஸ் கைது செய்கிறது. ஜெயிலில் அடைக்கப்படுகிறார். அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், துஷாராவை பார்ப்பதற்காக செல்கிறார். துஷாராவுக்கு திருமணமாகி கணவரும், குழந்தையும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

படம் முழுக்க நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். எல்லோருமே புதுமுகங்கள். கதாநாயகன் தீரஜ், களையான முகம். நடிப்பில் இன்னும் அவர் தேற வேண்டும். கதாநாயகிகள் துஷாரா, ப்ரதாயினி ஆகிய இருவரும் அழகு. ராதாரவி இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டும் வருகிறார். அவருக்கு நடிக்க சந்தர்ப்பம் இல்லை. சார்லி, அய்யோ பாவம் என்று அனுதாபத்தை சம்பாதிக்கிறார்.

ஒரு சின்ன அறைக்குள்ளேயே பெரும்பகுதி சம்பவங்கள் நடைபெறுவதால், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்துக்கு அதிக வேலை இல்லை. இசையமைப்பாளர் கேபி தன் திறமை முழுவதையும் காட்டி, பின்னணி இசை அமைத்து இருப்பார் போலும். சத்தம் அதிகம். டைரக்டர் சந்துரு கே.ஆர். ஒரு சமூக விழிப்புணர்வு படத்தை கொடுத்து இருக்கிறார். ஆரம்ப காட்சிகள் படத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. போகப்போக வேக குறைவு.

‘கிளைமாக்ஸ்’சில், படம் முடிவது போல் முடிந்து மீண்டும் தொடர்கிறது. இரண்டு மூன்று உச்சக்கட்ட காட்சிகளை பார்த்த களைப்பு.

Next Story