என் பஸ்சை காணவில்லை என்று புகார் கொடுக்கும் கதாநாயகன்: படம் தோழர் வெங்கடேசன் - விமர்சனம்


என் பஸ்சை காணவில்லை என்று புகார் கொடுக்கும் கதாநாயகன்: படம் தோழர் வெங்கடேசன் - விமர்சனம்
x
தினத்தந்தி 20 July 2019 5:25 PM GMT (Updated: 20 July 2019 5:25 PM GMT)

இரண்டு கைகளையும் இழந்த ஒரு ஏழை இளைஞர் போலீஸ் நிலையத்துக்கு மூச்சிறைக்க ஓடி வருகிறார். “என் பஸ்சை காணவில்லை. கண்டுபிடித்து கொடுங்கள்” என்று புகார் கொடுக்கிறார். படம் தோழர் வெங்கடேசன் சினிமா விமர்சனம்.

இரு கைகளும் இல்லாமல், பரட்டை தலையுடன் பரபரப்பாக நிற்கும் அந்த இளைஞரை கேலியாக பார்க்கிறார், போலீஸ் அதிகாரி. “உன் சைக்கிளை காணோம்...பைக்கை காணோம் என்று புகார் கொடுத்தால் நம்புவேன்...பஸ்சை காணோம் என்று பொய் புகார் கொடுக்காதே” என்று அவர் கண்டிக்கிறார்.

தன்னிடம் பஸ் வந்தது எப்படி? என்று சொல்ல ஆரம்பிக்கிறார், ஏழை இளைஞர். அந்த ஊரில் இட்லி கடை வைத்து பிழைப்பவர், சார்மிளா. இவருடைய அழகான ஒரே மகள் மீது பணக்கார கவுன்சிலர் கண் வைக்கிறார். அவரை, அதே ஊரில் சோடா தயாரித்து விற்கும் இளைஞர் வெங்கடேசன் எச்சரிக்கிறார். இந்த நிலையில், சார்மிளா திடீர் மரணம் அடைகிறார். அவருடைய ஈமச்சடங்குக்கான பணத்தை கவுன்சிலர் செலவு செய்வதுடன், சார்மிளாவின் மகளை தன்னுடன் வந்துவிடும்படி வற்புறுத்துகிறார்.

அவரிடம் இருந்து சார்மிளாவின் மகளை வெங்கடேசன் காப்பாற்றி அழைத்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். அப்போது அந்த அதிர்ச்சியான விபத்து நடக்கிறது.

வெங்கடேசன் மீது பஸ் மோதியதால், அவர் தன் இரண்டு கைகளையும் இழக்கிறார். அதற்கான நஷ்ட ஈடு அவருக்கு கிடைக்கும் வரை, அரசு பஸ் ஒன்றை வெங்கடேசனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறுகிறது. அதன்படி, வெங்கடேசனிடம் ஒரு பஸ் ஒப்படைக்கப்படுகிறது. பஸ் வந்தபின், வெங்கடேசன் வாழ்க்கையில் வசந்தம் வந்ததா, இல்லையா? என்பது மீதி கதை.

வெங்கடேசனாக அரிசங்கர், அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறார். சார்மிளாவின் மகள் மீது அக்கறை காட்டுவது, தன்னுடன் வர தயங்கும் அந்த பெண்ணிடம், “உன்னை என் அம்மாவாக பார்க்கிறேன்” என்று கூறி நம்பவைப்பது ஆகிய காட்சிகளில் அரிசங்கர் மிக இயல்பாக நடித்து இருக்கிறார். ஆஸ்பத்திரியில், தன் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டதை பார்த்து கதறி துடிக்கும்போது அவரும் உருகி, படம் பார்ப்பவர்களையும் உருக வைக்கிறார்.

சார்மிளாவின் மகள் கமலியாக மோனிகா, அழகு. உணர்ச்சிகளை மிக இயல்பாக முகத்துக்கு கொண்டு வருகிறார். கவுன்சிலராக அரசன், கிராமத்து வில்லனை கண்முன் கொண்டு வருகிறார். வேதா செல்வத்தின் கேமரா, கிராமத்து யதார்த்தங்களை அப்படியே பதிவு செய்து இருக்கிறது. பின்னணி இசையில் இசையமைப்பாளர் சகிஷ்னா, பளிச்.

கிராமத்தில், ஒரு ஆணும் பெண்ணும் தாலி கட்டிக் கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ முடியுமா? என்ற நெருடல் படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுவது, நிஜம். படம் முழுக்க கதாநாயகனுக்கும், நாயகிக்கும் சோகமே வாழ்க்கையானது போல் எதிர்மறையான காட்சிகள் தேவைதானா? இதுபோன்ற கேள்விகள் எழுந்தாலும், கோர்ட்டு தொடர்பான காட்சிகளில் டைரக்டர் மகாசிவன் சொல்ல வந்த கருத்தை எந்த சமரசமும் இல்லாமல் சொல்லியிருக்கும் துணிச்சலை பாராட்ட வேண்டும்.

Next Story