ஒரு வங்கியை கொள்ளையடிக்க சென்ற இளைஞர்கள்: படம் "கொரில்லா" - விமர்சனம்


ஒரு வங்கியை கொள்ளையடிக்க சென்ற இளைஞர்கள்: படம்  கொரில்லா - விமர்சனம்
x
தினத்தந்தி 20 July 2019 5:50 PM GMT (Updated: 20 July 2019 5:50 PM GMT)

நண்பர்கள் நான்கு பேருக்கும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஆசை. ஒரு வங்கியை எப்படி கொள்ளையடிக்க என்ற முடிவுக்கு வருகிறார்கள். படம் கொரில்லா சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா, மதன்குமார் ஆகிய 4 பேரும் நண்பர்கள். நிரந்தரமான வேலையில்லாத இளைஞர்கள். ஜீவா, போலி டாக்டராக இருக்கிறார். சதீஷ், ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை இழந்த வருத்தத்தில் இருக்கிறார். விவேக் பிரசன்னாவுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம். அது நிறைவேறாததால் விரக்தியில் அலைகிறார். மதன்குமாருக்கு விவசாய கடனை அடைக்க முடியாத வேதனை. ஜீவாவுடன் ஒரு குரங்கு நட்புடன் இருக்கிறது.

நண்பர்கள் நான்கு பேருக்கும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஆசை. இதற்காக ஒரு வங்கியை கொள்ளையடிப்பது என்ற முடிவுக்கு வருகிறார்கள். அதன்படி நான்கு பேரும் குரங்குடன் ஒரு வங்கிக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு போதுமான பணம் வங்கியில் இல்லை.

இந்த நிலையில், யாரோ போலீசுக்கு தகவல் கொடுக்க-ராதாரவி தலைமையில் போலீஸ் படை விரைந்து வந்து வங்கியை முற்றுகையிடுகிறது. ரூ.20 கோடி வேண்டும் என்று முதலில் கூறிய ஜீவாவும், நண்பர்களும் “விவசாய கடன்கள் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும்” என்று திடீர் நிபந்தனை விதிக்கிறார்கள்.

அவர்களின் கோரிக்கை, வங்கி முன்பு கூடிய இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்துகிறது. ஜீவாவுக்கு ஆதரவாக வாழ்த்து கோஷம் எழுப்புகிறார்கள். ஜீவா நண்பர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதா, இல்லையா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

ஜீவாவுக்கு, “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு...” என்பது மாதிரியான கலகல கதாபாத்திரம். படம் முழுக்க கலக்குகிறார். குறிப்பாக, அவர் போலி டாக்டராக வருகிற சீன்களில் தியேட்டர் அதிர்கிறது. காதலுக்கு முக்கியத்துவம் இல்லாத கதை என்பதால், ஜீவாவும் கதாநாயகி பின்னால் அலையவில்லை. கதையோடும், காமெடியோடும் ஒன்றியிருக்கிறார், ஜீவா.

சதீஷ், வழக்கம் போல் வசன நகைச்சுவையை நம்பியிருக்கிறார். சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். கதாநாயகி ஷாலினி பாண்டேவுக்கு அதிக வேலையில்லை. மதன்குமார் தொடர்பான காட்சிகள், கலங்க வைக்கின்றன. யோகி பாபு ஆஜரானதும், தியேட்டரில் ரசிகர்கள் உற்சாகமாகி விடுகிறார்கள்.

ராதாரவி போலீஸ் உயர் அதிகாரியாகவும், சந்தானபாரதி மத்திய அமைச்சராகவும் வருகிறார்கள். மொட்டை ராஜேந்திரன், கும்பலில் ஒருவர். குரங்கு என்னவோ செய்யப் போகிறது என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம்.

ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்.சின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்துள்ளன. டான் சான்டி, ஒரு கலகலப்பான பொழுதுபோக்கு படம் கொடுக்க முயற்சித்து இருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. இடைவேளைக்குப்பின் விவசாய கடன், இளைஞர்களின் எழுச்சி என திடீர் திருப்பத்தால், படம் வேகம் பிடிக்கிறது.


Next Story