மனித உறுப்புகளை திருடும் கும்பலும், அதை கண்டுபிடிக்க முயற்சிக்கும் கதாநாயகனும்-மெய் சினிமா விமர்சனம்


மனித உறுப்புகளை திருடும் கும்பலும், அதை கண்டுபிடிக்க முயற்சிக்கும் கதாநாயகனும்-மெய் சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 26 Aug 2019 11:07 PM GMT (Updated: 26 Aug 2019 11:07 PM GMT)

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளைஞர் நிக்கி சுந்தரம் அவரது உறவினர் ஜார்ஜ் மரியானை பார்க்க சென்னைக்கு வருகிறார். வழியில் அவருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ், சார்லி ஆகிய இருவரின் அறிமுகம் கிடைக்கிறது.

கதையின் கரு:  நகரில் இருந்து ஒதுங்கியிருக்கிறது, ஒரு நட்சத்திர ஆஸ்பத்திரி. அதில் பணிபுரியும் ஒரு பெண் (சார்லியின் மகள்) இரவு பதினொன்றரை வரை வேலை பார்த்துவிட்டு, வீட்டுக்கு புறப்படுகிறார். அங்கே தயாராக வந்து நிற்கிறது, ஒரு ஆட்டோ. அதில் பயணித்த அந்த பெண் வீடு போய் சேரவில்லை. மகளை காணவில்லை என்று சார்லி, போலீசில் புகார் கொடுக்கிறார்.

அந்த புகார் மீது போலீஸ் அதிகாரி நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளைஞர் நிக்கி சுந்தரம் அவரது உறவினர் ஜார்ஜ் மரியானை பார்க்க சென்னைக்கு வருகிறார். வழியில் அவருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ், சார்லி ஆகிய இருவரின் அறிமுகம் கிடைக்கிறது. சார்லி தனது மகள் காணாமல் போன சம்பவத்தை இருவரிடமும் சொல்கிறார்.

அவருக்கு நிக்கி சுந்தரமும், ஐஸ்வர்யா ராஜேசும் உதவ முன்வருகிறார்கள். நிக்கி சுந்தரம் துணிச்சலுடன் துப்பு துலக்க தொடங்குகிறார். சார்லியின் மகள் காணாமல் போனது போல் பல பெண்கள் காணாமல் போன விவரம் தெரியவருகிறது. காணாமல் போன பெண்களுக்கும், அந்த நட்சத்திர ஆஸ்பத்திரிக்கும் தொடர்பு இருப்பதை நிக்கி சுந்தரம் கண்டுபிடிக்கிறார். அவரை கொல்ல முயற்சி நடக்கிறது.

அதில் இருந்து அவர் தப்பினாரா, சார்லியின் மகளுக்கு என்ன நேர்ந்தது? குற்றவாளிகள் யார்-யார்? என்ற விவரங்கள், மீதி படத்தில் இருக்கிறது.

கதாநாயகன் நிக்கி சுந்தரம் 6 அடி உயரத்தில், கம்பீரம். அவருடைய தோற்றம் ‘அமெரிக்க ரிட்டன்’ கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் நிக்கிசுந்தரம் சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார்.

அவரை காதலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார். இருதய ஆபரேசன் செய்து கொண்ட போலீஸ் அதிகாரியாக கிஷோர், மகளை தொலைத்துவிட்டு பரிதாபமாக அலைந்து திரியும் அப்பாவாக சார்லி, ஆகிய இருவரும் கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்கள். 2 பேர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் நெகிழ வைக்கின்றன.

மோகன் ஒளிப்பதிவும், திருக்குவிக்குமார் இசையும் காட்சிகளை வேகமாக நகர்த்தியுள்ளன. புது டைரக்டர் எஸ்.ஏ.பாஸ்கரன் விறுவிறுப்பாக கதை செல்லியிருக்கிறார்.

மனித உறுப்புகளை திருடும் கும்பலும், அந்த கும்பலை பிடிக்கும் கதாநாயகனும், பார்த்து ரசித்து பழைய காட்சிகள் தான். சார்லிக்கும், கிஷோருக்கும் போடப்பட்டுள்ள முடிச்சு, டைரக்டரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.

Next Story