ஏழை குடும்பங்களை சேர்ந்த படித்த பெண்களுக்கு கபடி பயிற்சி - கென்னடி கிளப் விமர்சனம்


ஏழை குடும்பங்களை சேர்ந்த படித்த பெண்களுக்கு கபடி பயிற்சி - கென்னடி கிளப் விமர்சனம்
x
தினத்தந்தி 26 Aug 2019 11:33 PM GMT (Updated: 26 Aug 2019 11:33 PM GMT)

விளையாட்டு போட்டியை கருவாக வைத்து, “வெண்ணிலா கபடிக் குழு’ படத்தை கொடுத்த டைரக்டர் சுசீந்திரன், மீண்டும் விளையாட்டு போட்டியை கருவாக வைத்து, ‘கென்னடி கிளப்’ படத்தை கொடுத்து இருக்கிறார்.

பாரதிராஜா, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. பெண்கள் கபடிக்குழுவை நடத்தி வருகிறார். ஏழை குடும்பங்களை சேர்ந்த படித்த பெண்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை கபடி வீராங்கனைகளாக்கி, அவர்களின் குடும்ப வறுமையை போக்க முயற்சிக்கிறார். இந்த நிலையில், அவருடைய உடல்நிலை பாதிக்கப்படுகிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். தனது உடல்நிலையை கருதி, தன்னிடம் பயிற்சி பெற்ற பழைய மாணவர் சசிகுமாரை அழைத்து, வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கும் (கோச்) பொறுப்பை ஒப்படைக்கிறார். சசிகுமாரும் அதை ஏற்று வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கிறார். சசிகுமாரின் சிறந்த பயிற்சிக்கு பலன் கிடைக்கிறது. பல போட்டிகளில், அந்த வீராங்கனைகள் திறமையாக விளையாடி, வெற்றிகளை குவிக்கிறார்கள்.

அந்த குழுவில் உள்ள ஒரு வீராங்கனை இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்படுகிறார். அவர் இந்திய அணியில் விளையாடுவதற்கு முப்பது லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார், பொறுப்பில் இருக்கும் அதிகாரி. இதனால் விரக்தி அடையும் அந்த வீராங்கனை விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் அவர் உயிர் பிழைத்தாரா? இந்த பிரச்சினையை பாரதிராஜாவும், சசிகுமாரும் எப்படி கையாள்கிறார்கள்? என்பது மீதி கதை.

அந்த கிராமத்தின் நடுத்தர-ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் உயர்வுக்கு கபடி விளையாட்டு மூலம் வழிகாட்டுபவராக பாரதிராஜா வருகிறார். விஷம் குடித்த வீராங்கனையின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு, “நீ தற்கொலை செய்து கொண்டால், பிரச்சினை தீர்ந்து விடுமா?” என்று உரிமையுடன் திட்டும்போது, பாரதிராஜா நேர்மையான பயிற்சியாளராக உயர்ந்து நிற்கிறார்.

பெண்கள் அணியின் பயிற்சியாளர் கதாபாத்திரம், சசிகுமாருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மிரட்டல்களுக்கு அஞ்சாமல், எடுத்துக் கொண்ட முயற்சியை எதற்காகவும் கைவிடாமல், வெற்றி பெறுகிற ‘கோச்’ கதாபாத்திரத்தில், நிமிர்ந்து நிற்கிறார். பாரதிராஜாவிடம் அடி வாங்கிக் கொண்டு வெளியே வரும்போது விசாரிப்பவர்களிடம், “இப்ப பரவாயில்லை. இதற்கு முன்பு பலமுறை அவரிடம் அடி வாங்கியிருக்கிறேன்” என்று சமாளிக்கும் காட்சியில், ஆசிரியர்-மாணவர் உறவுக்கு சசிகுமார் உதாரணமாக இருக்கிறார்.

வீராங்கனையின் காதலராக வரும் இளைஞர் கதாபாத்திரத்தை மறக்க முடியாது. படத்தின் ஒரே நகைச்சுவை அம்சம், அந்த இளைஞர்தான். வரும்போதெல்லாம் சிரிக்க வைக்கிறார். வில்லன் வேலைகளை முரளி சர்மா அலட்டல் இல்லாமல் செய்திருக்கிறார்.

டி.இமானின் பின்னணி இசையிலும், குருதேவின் ஒளிப்பதிவிலும் கபடி விளையாட்டு போட்டிகளை நேரில் பார்க்கும் அனுபவத்தை கொடுத்து இருக்கிறார்கள். கிராமத்து பெண்களை மையப்படுத்தி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், கதாபாத்திரங்களை யதார்த்தமாக நடிக்க வைத்து, விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சுசீந்திரன். படத்தில் பெரிய திருப்பங்கள் இல்லாதது, குறை. வீராங்கனைகளும், இதர கதாபாத்திரங்களும் நடித்தது போல் இல்லாமல், மிக இயல்பான-எளிமையான மனிதர்களாக தெரிவது, படத்தின் பெரிய பலம்.

Next Story