மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளை வெளியேற்றும் அதிகாரிகள் அதனை தடுக்கும் கதாநாயகன் படம் - அடவி


மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளை வெளியேற்றும் அதிகாரிகள் அதனை தடுக்கும் கதாநாயகன் படம் - அடவி
x
தினத்தந்தி 12 Feb 2020 12:28 AM GMT (Updated: 12 Feb 2020 12:28 AM GMT)

மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளை வெளியேற்றி ரிசார்ட் கட்ட தொழில் அதிபர் ஆர்.என்.ஆர். மனோகர் முயற்சிக்கிறார். அவருக்கு எம்.எல்.ஏ.வும், அதிகாரிகளும் உதவுகிறார்கள். விமர்சனம்

கோத்தகிரி மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளை வெளியேற்றி ரிசார்ட் கட்ட தொழில் அதிபர் ஆர்.என்.ஆர். மனோகர் முயற்சிக்கிறார்.  அவருக்கு எம்.எல்.ஏ.வும், அதிகாரிகளும் உதவுகிறார்கள். இதனை பழங்குடி இளைஞர் வினோத் கிஷன் மக்களுடன் சேர்ந்து எதிர்க்கிறார். இதனால் மனோகர் தூண்டுதலில் போலீசார் அவரை கைது செய்கின்றனர்.

போலீஸ் பிடியில் இருந்து வெளியே வரும் வினோத் கிஷன் மாயமாகிறார். தொடர்ந்து கலெக்டர் குண்டு வைத்து கொல்லப்படுகிறார். சில போலீஸ் அதிகாரிகளும் கொலையாகிறார்கள். மாயமான வினோத் கிஷனையும், அவர் நண்பர்களையும் போலீஸ் சந்தேகிக்கிறது. கிராமத்தினரோ குலதெய்வம் பழிவாங்குவதாக நம்புகிறார்கள்.

வினோத் கிஷன் என்ன ஆனார். கொலையாளி யார்? கிராமத்தினர் இருப்பிடத்தை தக்க வைத்தார்களா? என்பது மீதி கதை..

ஆக்ரோஷமான இளைஞனாக வருகிறார் வினோத் கிஷன். அவரது உக்கிரமான விழிகளும், முகமும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்த வைக்கிறது. காதல் காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். அம்மு அபிராமி அழகில் வசீகரிக்கிறார். கிளைமாக்சில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

ஆர்.என்.ஆர். மனோகர், போலீஸ் அதிகாரியாக வரும் சாம்பசிவம் ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டுகின்றனர். கிராம மக்களாக வரும் அனைவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். சப்ப வந்துட்டா என்ற சஸ்பென்சில் சில கொலைகள் நடப்பது திகிலூட்டுகிறது. கிளைமாக்சில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சரத்ஜடாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். வசனங்களும் பலம். மலைவாழ் மக்களின் போராட்டத்தையும், அதிகாரிகளின் அடக்குமுறையையும் விறுவிறுப்பாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் ரமேஷ்ஜி. அவரே ஒளிப்பதிவும் செய்து மலை பிரதேசத்தின் ரம்மியமான அழகை கண்களில் பதிக்கிறார்.


Next Story