சிரிப்பு நோயாளியான கதாநாயகனும், தமாஷ் தாதாக்களும் - நான் சிரித்தால்


சிரிப்பு நோயாளியான கதாநாயகனும், தமாஷ் தாதாக்களும் - நான் சிரித்தால்
x
தினத்தந்தி 17 Feb 2020 1:07 AM GMT (Updated: 17 Feb 2020 1:07 AM GMT)

ஹிப் ஹாப் ஆதி, ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறார். உடன் பணிபுரியும் ஐஸ்வர்யா மேனன் மீது அவருக்கு காதல் வருகிறது. ஐஸ்வர்யா மேனன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். "நான் சிரித்தால்" படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  அவருடைய பணக்கார அப்பாவுக்கு தன் மகளை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஆதிக்கு கொடுப்பதில் உடன்பாடு இல்லை. ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறார் என்பதற்காக மட்டுமே அரைகுறை மனதுடன் சம்மதிக்கிறார்.

இந்த நிலையில், உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் ஆதி அதிகப்பிரசங்கியாக நடந்து கொண்டதன் காரணமாக வேலை இழக்கிறார். இதனால் அவருக்கும், ஐஸ்வர்யா மேனனுக்குமான காதல் முறிந்து போகும் நிலை ஏற்படுகிறது. இதற்கிடையில், ஆதியின் நண்பர் யோகி பாபு காணாமல் போகிறார்.

அவரை தேடிப்போன ஆதி, தாதா கே.எஸ்.ரவிக்குமாரிடம் மாட்டிக் கொள்கிறார். அவர், இவரை கொலை செய்ய முயற்சிக்க-ஆதிக்கு இருந்து வரும் சிரிப்பு நோய் அவர் உயிரை காப்பாற்றுகிறது. ஆதியை கொலை செய்யும் முடிவை ரவிக்குமார் தள்ளிப்போடுகிறார். இதை கேள்விப்பட்டு ரவிக்குமாரின் எதிரியான இன்னொரு தாதா ரவிமரியா, ஆதிக்கு உதவ முன்வருகிறார்.

ரவிக்குமாரின் கொலை வெறியில் இருந்து ஆதி உயிர் தப்பினாரா, அவருக்கும் ஐஸ்வர்யா மேனனுக்குமான காதல் என்ன ஆகிறது? என்ற கேள்விகளுக்கு விடை, படத்தின் பின்பகுதியில் இருக்கிறது. ஹிப் ஹாப் ஆதி, சிரிப்பு நோயாளி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். சுகத்திலும், சோகத்திலும் அவர் சிரிப்பதும், அதன் விளைவாக நல்லவை நடப்பதும், மனதுக்கு நெருக்கமான தமாஷ் காட்சிகள்.

ஐஸ்வர்யா மேனன், அழகான காதலி. அப்பாவிடம் காதலர் ஆதியை விட்டுக் கொடுக்காமல் பேசும் காட்சியிலும், கோபத்தில் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று கூறும் காட்சியிலும், அவரிடம் ஒரு உண்மையான காதலியின் ஆதங்கம் தெரிகிறது.

பாண்டியராஜன் டாக்டர் வேடத்திலும், கே.எஸ்.ரவிக்குமாரும், ரவிமரியாவும் சிரிப்பு தாதாக்களாகவும் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். முனீஷ்காந்த், படவா கோபி ஆகிய இருவரும் பக்க வாத்தியங்களாக சிரிக்க வைக்கிறார்கள். இந்த சிரிப்பு விருந்தின் சிகரமாக கடைசி காட்சியில், யோகி பாபுவும் சேர்ந்து கொள்கிறார்.

வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு அழகு சேர்க்கிறது. ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்கள் எல்லாமே ஆட்டம் போட வைக்கும் ராகங்கள். பின்னணி இசையில், வாத்தியங்களின் இரைச்சல். பேய் கதைகளும், திகில் கதைகளும் ஆக்கிரமித்திருந்த திரையில், நகைச்சுவை திருவிழா பார்த்த திருப்தி. ‘கிளைமாக்ஸ்’ காட்சியை எப்படி முடிப்பது? என்று டைரக்டர் ராணா திணறி இருப்பது, திரையில் தெரிகிறது.

Next Story