ஆபத்தில் இருந்து மகனை காப்பாற்ற கதாநாயகன், தாதா ரவுடிகளோடு வாழ்வா, சாவா போராட்டம் - காட்பாதர்


ஆபத்தில் இருந்து மகனை காப்பாற்ற கதாநாயகன், தாதா ரவுடிகளோடு வாழ்வா, சாவா போராட்டம் - காட்பாதர்
x
தினத்தந்தி 26 Feb 2020 12:32 AM GMT (Updated: 26 Feb 2020 12:32 AM GMT)

தனது மகனை ஆபத்தில் இருந்து காப்பாற்ற போராடும் கதாநாயகன், தாதா ரவுடிகளோடு வாழ்வா, சாவா போராட்டம் படம் ”காட்பாதர்” விமர்சனம்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு மனைவி அனன்யா மற்றும் ஒரே மகனுடன் சந்தோஷமாக வாழ்க்கையை நகர்த்துகிறார் நட்டி நட்ராஜ். அதே பகுதியில் கொலை, கட்ட பஞ்சாயத்து என்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு ஊரையே நடுங்க வைக்கிறார் லால். அவரது மகனுக்கு இருதய கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கின்றனர்.

இருதயத்தை மாற்றினால்தான் மகன் பிழைப்பான் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மகனுக்கு பொருந்தும் ரத்தம் நட்டி நட்ராஜ் மகனிடம் இருப்பதை லால் கண்டுபிடிக்கிறார். அந்த சிறுவனை கொன்று இதயத்தை எடுத்து மகனுக்கு பொருத்த முடிவு செய்கிறார். இதற்காக ரவுடிகளுடன் நட்டி நட்ராஜ் வசிக்கும் குடியிருப்புக்குள் நுழைகிறார். போலீசும் அவருக்கு உடந்தையாக இருக்கிறது.

இந்த ஆபத்தில் இருந்து மகனை நட்டி நட்ராஜ் காப்பாற்றினாரா? என்பது மீதி கதை.

நட்டி நட்ராஜுக்கு முக்கிய படம். வம்பு தும்புக்கு செல்லாத அமைதியான குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். மகனை கொல்ல ரவுடிகள் குடியிருப்புக்குள் புகுந்ததும் அவனை காப்பாற்ற காட்டும் தவிப்பில் பாசமான தந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

ரவுடிகளோடு அவர் நடத்தும் வாழ்வா, சாவா போராட்டம் இருக்கை நுனிக்கு இழுக்கும் திகில். அனன்யா கொலையாளிகளிடம் இருந்து மகனை காப்பாற்ற போராடும் காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தாதாவாக வரும் லால் வில்லத்தனத்தில் மிரட்டி உள்ளார்.

நட்டி மகனாக வரும் அஸ்வந்த் கதாபாத்திரத்தில் நிறைவு. அனைத்து காட்சிகளும் ஒரே அடுக்குமாடி குடியிருப்புக்குள் முடங்குவது தொய்வாக இருந்தாலும் அதையும் மீறி முழுகதையையும் விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ஜெகன் ராஜசேகர். சண்முக சுந்தரத்தின் கேமரா, காட்சிகள் திகிலூட்டுகிறது. நவின் ரவீந்திரனின் பின்னணி இசை படத்தோடு ஒன்ற வைக்கிறது.

Next Story