நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொள்ளையடிப்பது எப்படி? - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்


நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொள்ளையடிப்பது எப்படி? - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
x
தினத்தந்தி 7 March 2020 4:49 PM GMT (Updated: 7 March 2020 4:49 PM GMT)

துல்கர் சல்மான், ரக்‌‌ஷன் ஆகிய இருவரும் நண்பர்கள். இரண்டு பேருமே ஆதரவற்ற இளைஞர்கள். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொள்ளையடித்து வருகிறார்கள். படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - விமர்சனம்.

கதையின் கரு:  கொள்ளையடித்த பணத்தில் குடித்து கொண்டாடுகிறார்கள். இவர்களிடம் ரிதுவர்மாவும், நிரஞ்சனி அகத்தியனும் நட்பாக வந்து சேருகிறார்கள். இவர்களும் ஆதரவற்றவர்கள்தான். நட்பு, காதலாக மாறுகிறது. ரிதுவர்மாவை துல்கர் சல்மானும், நிரஞ்சனியை ரக்‌‌ஷனும் காதலிக்கிறார்கள்.

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ஒரு பெரிய தொகையை திருடுகிறார்கள். பணத்தை பறிகொடுத்தவர் தனது நண்பரான போலீஸ் அதிகாரி கவுதம் வாசுதேவ் மேனன் உதவியை நாடுகிறார். கவுதம் வாசுதேவ் மேனன் துப்பறிய தொடங்குகிறார்.

கொள்ளையடித்த பணத்துடன் துல்கர் சல்மான், ரக்‌‌ஷன், ரிதுவர்மா, நிரஞ்சனி ஆகிய நான்கு பேரும் கோவா செல்கிறார்கள். அங்கே துல்கர் சல்மான், ரக்‌‌ஷன் இருவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் காதல் கலந்த இளைஞர் கதாபாத்திரத்துக்கு துல்கர் சல்மான், கச்சிதமாக பொருந்துகிறார். லேப்டாப்பை பயன்படுத்தி பண மோசடி செய்வது, ரிதுவர்மாவிடம் காதல்வசப்படுவது, அவர் பணத்துடன் காணாமல் போனதும் அதிர்ச்சி அடைவது என பல்வேறு உணர்ச்சிகளை வெகு இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

தமாசான நண்பராக ரக்‌‌ஷன். கருணாகரன், சதீ‌‌ஷ் ஆகிய இரண்டு பேர்களைப்போல் இவரும் வசன காமெடியை நம்பியிருக்கிறார். ரிதுவர்மா, சுமாரான முகம். மூன்றாயிரம் ரூபாய்க்கு அவ்வளவு மரியாதை கொடுக்கும் இடத்தில், ஆச்சரியப்பட வைக்கிறார். கொள்ளைக்காரி கதாபாத்திரத்துக்கு இவர் பொருந்தவில்லை. நிரஞ்சனி அகத்தியனின் ஒப்பனையில்லாத முகம், சராசரி பெண்ணுக்கு பொருந்துகிறது.

திறமையான டைரக்டர் என்று பெயர் வாங்கிய கவுதம் வாசுதேவ் மேனன், சிறந்த நடிகராகவும் முத்திரை பதிக்கிறார். இவருடைய துப்பறியும் ஸ்டைல், கதையோட்டத்துக்கு வேகம் சேர்க்கிறது.

மசால் காபி மற்றும் ஹர்‌‌ஷவர்தன் ரமேஸ்வர் இசையில் பாடல்கள் நினைவில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசை, படத்தின் ஜீவனாக அமைந்து இருக்கிறது.

இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படி திருடுவது? என்பதை படம் பேசியிருக்கிறது. குறிப்பாக போதை மருந்து கடத்தல்காரரின் கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடிக்கும் நுட்பம், மிரள வைக்கிறது. மாட்டிக்கொள்ளாமல் திருடுவது எப்படி? என்பதை கற்றுக்கொடுப்பது போன்ற காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். (டைரக்டர்களுக்கும் சமூக கடமை இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)

Next Story