போதைப்பொருள் ஒழிப்பு - ‘ருத்ர தாண்டவம்’ விமர்சனம்


போதைப்பொருள் ஒழிப்பு - ‘ருத்ர தாண்டவம்’ விமர்சனம்
x
தினத்தந்தி 5 Oct 2021 10:34 AM GMT (Updated: 5 Oct 2021 10:34 AM GMT)

போதைப்பொருள் கடத்தல், சப்ளை, விற்பனை செய்யும் கும்பல்களை ஒழிக்க காவல் ஆய்வாளர் ருத்ரன் எடுக்கும் நடவடிக்கைகளும், அதன் விளைவுகளுமே 'ருத்ர தாண்டவம்'.

சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணி செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரிஷி ரிச்சர்ட் படகில் கடத்தி வரும் பலகோடி மதிப்புள்ள போதை பொருளை கைப்பற்றி அழிக்கிறார். இதனால் அவரை கடத்தல் கும்பலை சேர்ந்த கவுதம் மேனன் பழிவாங்க துடிக்கிறார். 

இன்னொரு புறம் கஞ்சா விற்று போலீசிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடும் இரண்டு இளைஞர்களை ரிஷி ரிச்சர்ட் பின்னால் விரட்டி சென்று வண்டியில் மிதித்து கீழே தள்ளுகிறார். அவர்களின் குடும்ப நிலையை கருதி கஞ்சா வழக்கு போடாமல் விடுவிக்கிறார். அதில் ஒருவன் வலிப்பு வந்து இறந்து போக ரிஷி ரிச்சர்ட் தள்ளிவிட்டதால்தான் இறந்தான் என்று பிரச்சினை பூதாகரமாக வெடிக்கிறது. ரிச்சர்ட்டை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இதன் பின்னணியில் உள்ள சதி என்ன? ரிஷி ரிச்சர்ட் நிரபராதி என்று நிரூபித்தாரா? என்பது மீதி கதை. 

நேர்மையான போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன் வருகிறார் ரிஷி ரிச்சர்ட். அதிரடி சண்டையிலும் வேகம். இளைஞன் சாவுக்கு காரணமாகி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியில் தவிக்கும்போது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். ரிஷி ரிச்சர்ட் மனைவியாக வரும் தர்ஷா குப்தா கதாபாத்திரத்தில் கச்சிதம். கவுதம் மேனன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். போலீஸ் ஏட்டாக வரும் தம்பி ராமையா, வக்கீலாக வரும் ராதாரவி, நீதிபதியாக வரும் மாளவிகா அவினாஷ் கதாபாத்திரங்களும் நேர்த்தி. போதை பொருள் கடத்தல் பின்னணியில் சாதி, அரசியல் ரீதியிலான சமூக அவலங்களை அழுத்தமான திரைக்கதையில் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் மோகன் ஜி. 

நீதிமன்ற விவாதங்கள் சிந்திக்க வைக்கின்றன. ஆரம்பத்தில் கதை மெதுவாக நகர்கிறது. பின்னர் திருப்பங்களுடன் விறுவிறுப்புக்கு மாறுகிறது. ஜூபினின் இசையும், பரூக் பாஷாவின் ஒளிப்பதிவும் பலம் சேர்த்துள்ளன.


Next Story